Saturday, July 27, 2013

உதவி உபத்திரவமான கதை


என் கல்லூரித் தோழன் தொலைபேசியில் அழைத்தான். அவன் பணியிட நண்பரொருவருக்கு ஓட்டுனர் தேவையிருந்தது. நான் என்னைத் தினமும் அலுவலகம் கொண்டு வரும் சகாவிடம் இதுபற்றிக்கூற, அவன் தனது கூட்டாளியொருவனை இதற்குப் பரிந்துரைத்தான். ஒருவழியாக நேர்முகத்தேர்வு முடிந்து பணியும் உறுதியானது. சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்துவிடுவதனால் நண்பர் தோழனை அழைக்க, அவர் என்னைத் தொடர்பு கொள்ள, நான் சகாவின் காதுக்கு விஷயத்தைக் கொண்டு போக, அது அவர் கூட்டாளிக்குச் சென்று, பின்னர் மறுபடியும் சென்ற வழியே திரும்பிப் பயணிக்கிறது. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் சம்பந்தமேயில்லாமல் நாங்கள் மூன்றுபேர் கிடந்து அல்லாடுகிறோம். உதவி எப்படி உபத்திரவமாவதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இல்லை. 

Tuesday, July 16, 2013

நண்பர்கள் சந்திப்பு

அமெரிக்காவில் வசிக்கும் நண்பன் ரவிஷங்கரின் குடும்பத்தை குவேய்த்தில் பணிபுரியும் அருள்செல்வன் குடும்பசகிதமாகச் சென்று  கண்டு மகிழ்ந்தார்.

சில நிழற்படங்கள் :


 KFC நிறுவனர் கேர்னல் சான்டர்ஸ் + அருள்


அருளும் ரவியும்


இரு குடும்பங்கள் 

**இந்த நட்பு அடுத்த தலைமுறையிலும் தொடரணும். 

அஞ்சலி – T M சௌந்தர்ராஜன்


எனக்கு அப்பொழுது 10 வயதிருக்கும். அவன்தான் மனிதன் என்றொரு சிவாஜி கணேசன் படம். வாழ்வில் சக மனிதர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் மகிழ்ச்சியடையும் கதாபாத்திரத்தை மிகவும் பிடிக்க ஒரு காரணம் அதில் இடம்பெற்ற பாடல்கள். குறிப்பாக அதைப் பாடிய பாடகரின் குரலினிமை. அந்த மதிப்புக்குரிய மாமேதை மறைந்த T M S அவர்கள். 60/70 களில் அனைத்து முன்னணி நாயகர்களும் இவர் குரலில்தான் திரையில் பாடினார்கள். எல்லோருக்கும் அந்தக் குரல் அற்புதமாக இயைந்தது. தத்துவப்பாடல்கள், பக்திப்பாடல்கள், சோகப்பாடல்கள், காதல்பாடல்கள் என அனைத்து கானங்களும் இனித்தன. பிற்கால இசையமைப்பளர்கள் புதுக்குரல்களை அறிமுகப் படுத்திப் பல நூறு பாடல்களைப் பதிவு பண்ணினாலும் இவர் குரலுக்கு ரசிகர்கள் கூடினார்களேயன்றிக் குறைந்தபாடில்லை. இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இவர் குரல் அற்புதமான சோக கீதம் பாடியது. பின்னர் ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக வாய்ப்புகளும் குறைந்தன. இருந்தாலும் அரசியல் மேடைகளிலும், திருமண வரவேற்புகளிலும் இவர் பாடல்கள் விடாமல் ஒலித்தன. இறுதிக்காலத்தில் தான் பெற்ற செல்வங்களால் சொல்லொனா மனத்துயரம் கொண்டு தம்முயிரை மாய்க்க முயன்ற செய்தி தற்கால இளைஞர் சமுதாயத்தின் சுயநலப்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இறுதியாகத் தனது 93வது வயதில் இயற்கை எய்திய இந்த வெண்கலக்குரலோன் தமது பாடல்கள்மூலம் என்றும் வாழ்வார். அவர் ஆதமா சாந்தியடையட்டும்.