Monday, February 29, 2016

அப்பா வருவாரா? - 10

அத்தியாயம் - பத்து

ஷங்கர் : எனக்கு எப்பவுமே என் சந்தோஷம்தாங்க முக்கியம். அதுக்கு தடையா யாரு வந்தாலும் அந்தத் தடைய உடைப்பேன். மகா எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருந்தாலும் என் சிறுபிராயத்தில என் குடும்பமே என்னைக் குத்திக் காட்ட ஒரே காரணமா இருந்திருக்கான். அதனால நான்தான் அவனை அந்தப் பொண்ணோட மோட்டார் ரூமில வச்சு பூட்டிட்டு வெளியே கிடந்த வைக்கைப் போருக்குத் தீ வச்சிட்டு ஓடினேன். அந்தத் தீய அணைக்க வந்தவங்க கிட்ட அவன் வசமா மாட்டிக்கிட்டான். அப்படியும் என் மனசுல இருந்த வெறுப்பு அடங்கல்ல. சென்னையில நான் காலூன்ற அவன் உதவினான். ஆனா அவன் மனைவி, குழந்தையோட சந்தோஷமா இருப்பது என்னை உறுத்திக்கிட்டே இருந்தது. அதுக்கும் வேள வந்திச்சு. குடும்பத்தப் பிரிச்ச பிறகு அவன் மனைவியால எனக்கு எந்த உபயோகமும் இல்ல. அதில்லாம குழந்தை வேற எக்ஸ்ட்ரா லக்கேஜ்.  டுபாய்ல நல்ல வேல கெடச்சி பறந்து வந்துட்டேன். இனி ஒரு நல்ல வெளிநாட்டுப் பெண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி அங்கே போய் செட்டில் ஆவதுதான் என் குறிக்கோள்.

மாளவிகா : .ஷங்கர் இப்படிப் பண்ணுவான்னு நான் நினைக்கவேயில்ல. வெளியூருக்குப் போய் செட்டில் ஆவலாம்னு சொல்லிட்டிருந்தான். இவன் மட்டும்தான் நமக்குக் குழந்தை அப்பிடின்னு வேற சொல்லிட்டிருந்தானே? எல்லாம் காரியத்த முடிக்கிறதுக்குத்தானா? இப்ப என்ன பண்றதுன்னு தெரியல்லயே? அதுக்குத் தீர்வு குடுக்கிறேன்னு வந்த மூர்த்தி, சலீம், க்ரிஷ் எல்லாருமே அவனவனுக்குத் தீர்வு தேடிட்டு ஓடிட்டானுங்களே? என் மூளை ஏன் இதுக்கெல்லாம் ஒத்துக்கிச்சு? அவனப் பழி வாங்கிறேன்னுட்டு என்னையே நான் பழி வாங்கிட்டேனோ? இப்ப ஆஃபீஸ்லயும் பேரு கெட்டுப் போச்சு. இந்த அம்மா வேற எப்ப பார்த்தாலும் தொண தொணண்ணு எதையாவது சொல்லிக் குழப்பிக்கிட்டே இருக்கு. இப்ப என பண்ணறதுன்னு தெரியல்லியே?

சரோஜினிதேவி : மகா ஐயாவைப் பார்த்துட்டு வீட்டுக்குப் போனேன். போய் ரூம் கதவ மூடிட்டு ஓன்னு அழுதேன். இவர் குரல் கேட்டு வந்து தெறந்து பார்த்தேன். என் கண்ணு கலங்கியிருப்பதைப் பார்த்திட்டு ஏம்மான்னு பதறிட்டாரு. நடந்த விஷயத்த அவருகிட்ட சொன்னேன். பொறுமையா எல்லாத்தையும் கேட்டாரு. ஒண்ணுமே சொல்லல்ல. மறுநாள் காத்தால என்னைக் கெளம்பச் சொன்னாரு. எங்கன்னு கேட்காம நானும் கெளம்பினேன். போற வழியிலதான் மகா ஐயாவோட சம்சாரத்தப் பார்க்கப் போற விஷயத்த சொன்னாரு. எனக்கு கண் கலங்கிடிச்சு. இந்த மனுஷன் என் கிட்ட சொல்லாம எல்லாத்தையும் நேத்து இரவே பேசி முடிவு பண்ணிட்டாரேன்னு பெருமையா இருந்திச்சு. அந்தம்மா அழகா, அம்சமா கண்ணெல்லாம் சோகமா இருந்துச்சு. நாங்க சொன்னதப் பொறுமையாக் கேட்டுச்சு. தான் தப்பு பண்ணினத முழுமனதோட ஏத்துக்கிச்சு. குழந்தைய ஹாஸ்டல்ல விட்டிருக்கேன்னு குற்றவுணர்ச்சியோட சொல்லிச்சு. பாவம். நல்லது நடக்கும்னு நம்பிக்கையோட பேசிட்டு வந்தோம்.

மகாதேவன் : சரோஜினியோட கணவர் என்ன வந்து பார்த்துப் பேசினாரு. ரொம்பத் தெளிவா இருந்தது அவர் பேச்சு. தன் மனைவி பற்றி ரொமபவும் பெருமையாப் பேசினாரு. என் மேல அவங்களுக்கு இருக்கிற மரியாதை பற்றியும், இப்ப நான் இருக்கிற நிலமையால மனசு படுற கஷ்டம் பற்றியும் சொன்னாரு. முக்கியமா என் குழந்தை பற்றிப் பேசினாரு. எனக்கு கண்ணில கண்ணீர் வந்திருச்சு. நெருங்கி வந்து உரிமையோட தோள் மேல கை போட்டு ‘நான் இருக்கேன், பாத்துக்கிறேன்’ அப்பிடின்னு தீர்மானமா சொன்னாரு. எனக்கென்னமோ என் வாழ்க்கை திரும்பியும் துளிக்கும்னு நம்பிக்கை வந்திருச்சு.

வஷிஷ்ட் :  அம்மா ஹாஸ்டலுக்கு வந்திருந்தா. அவ கூட ஒரு அங்கிளும் ஆன்டியும் வந்தாங்க. இவங்க ரெண்டு பேரையும் பார்த்தோண்ணே எனக்கு ரொம்ப நாளாப் பார்த்துப் பழகிய மாதிரி இருந்திச்சு. என்னைக் கூப்பிட்டு மடியில் உட்கார வச்சுக்கிட்டு என் கிட்டயே ரொம்ப நேரம் பேசுனாங்க. எனக்கு காட்பரீஸ் சாக்லேட் குடுத்தாங்க. எனக்கு என்ன, என்ன புடிக்கும்னு கேட்டாங்க. ரொம்ப நாளைக்கப்புறம் மனசு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. நான் எனக்கு அப்பாவைத்தான் ரொம்பவும் புடிக்கும்னு சொன்னேன். மற்ற நாட்களைப் போல அம்மா அதுக்கு என்னைத் திட்டி, அடிக்காம அமைதியாச் சிரிச்சிட்டு இருந்தாங்க. உன் ஆசை நிறைவேறப் போகுது கண்ணா அப்பிடின்னு அந்த ஆன்டி சொன்னாங்க. என மனசுல ஒரு கேள்வி வந்திச்சு. தயங்கித் தயங்கி நான் கேட்டேன்

      ‘அப்பா வருவாரா?’


(முற்றும்)


பி.கு

விவாகரத்தான குடும்பங்களில் அல்லல்படும் குழந்தைகள்தான் பிற்காலத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுத் தம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


அப்பா வருவாரா? - 9

அத்தியாயம் - ஒன்பது

மகாதேவன் குழப்பத்தில் இருந்தான்.

தன்னைப் பார்க்க யாரோ ஊரில் இருந்து வந்திருப்பதாக கூர்க்கா வந்து சொல்லி விட்டுப் போயிருந்தான். அனுப்பச் சொல்லி விட்டு யாராயிருக்கும் என்று காத்திருந்தான். நிழலாடியது.

      ‘ஐயா, நல்லாயிருக்கீங்களா?’

நிமிர்ந்து பார்க்க முன், அவன் காலடியில் அவள் கிடந்தாள். பதறியபடி

      ‘யாரும்மா நீ, ஏன் இப்படி?’

      ‘என்னைத் தெரியல்லீங்களா, நாந்தான் சரோஜா’

இப்பொழுதுதான் அவளை மறுபடி ஒரு முறை பார்த்தான். கிராமத்தில் இவன் வீட்டில் ஒத்தாசை செய்த பணிப்பெண். ஒரு அசம்பாவிதத்துடன் அந்த ஊரை விட்டே போனவள். மறுபடியும் ஏன் தேடி வந்திருக்கிறாள்?

      ‘ஞாபகம் இருக்கும்மா, எப்படி இருக்க?’

சம்பிரதாயமான கேள்வி.

      ‘நல்லா இருக்கேனுங்க.’

தன்னைப் பற்றி விலாவாரியாக எல்லாவற்றையும் சொன்னாள். ஊரை விட்டுப் போய் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து அங்கு சாமியார்களுக்கு ஒத்தாசை செய்ததையும், தன்னை விரும்பிய ஒரு பக்தர் பெரிய சாமியாரின் ஆசியுடன் அவளுக்கு வாழ்வளித்து அவள் குழந்தையையும் ஏற்றுக் கொண்டதையும் சொன்னாள். அவருக்கு பெரிய தொழிற்சாலைகள் இருப்பதாகவும் தன்னை நன்றாக வைத்துப் பார்ப்பதாகவும் பூரித்தாள்.

‘ஊர்ல உள்ள மார்யாயி ஒரு நா கோவில்ல என்னையப் பாத்தா. அவதான் ஐயாவுக்கு நேர்ந்த கதியச் சொன்னா. அன்னைல இருந்து எனக்கு உங்களையும் உங்க வூட்டுகார அம்மாவையும் பார்த்து நடந்த உண்மையச் சொல்ல வந்தேனுங்க’

மகாதேவன் விரக்தியாய்ச் சிரித்தான்.

      ‘அந்தக் கட்டத்த எல்லாம் தாண்டியாச்சு தாயி.’

என்னமோ அவனுக்கு இவளைப் பார்த்ததும் உள்ளே அணை உடைந்தது. நம்மீது நம்பிக்கை வைத்திருக்கும் நபர்கள் நாம் வஞ்சிக்கப் பட்டிருக்கும் வேளைகளில் நம்முன் தோன்றினால் வரும் உணர்வு அது.

அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்தான். தலையில் கையை வைத்துக் கொண்டு ஓவென அழத் தொடங்கினான். சரோஜினி அவன் தோளைத் தொட்டு அவனை ஆசுவாசப்படுத்தினாள். அதில் ஒரு தாயின் பரிவு இருந்தது.

சற்று நேரத்தில் மகா தொடர்ந்து பேசினான்.

‘யார என் சொந்தத் தம்பியா நெனச்சு என்னால முடிஞ்ச உதவியெல்லாம் பண்ணினேனோ அவனே கடைசில என் வாழ்க்கைய அழிக்கக் காரணமாயிட்டான். என் பொண்டாட்டி மனசில விஷத்த விதச்சு, அவள திச திருப்பி, அவன் பசியத் தீர்த்துக்கிட்டு விவாகரத்து வரைக்கும் கொண்டு போய்ட்டான். எல்லாம் முடிஞ்சோன்னே சத்தமில்லாம வெளியூர் போய்ட்டான்’

அவள் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘இப்ப அவ ஊர்ல எல்லார்கூடவும் பழகுறா. என்னப் பழி வாங்குறதா நெனச்சி தன்னத்தானே பலி கொடுக்கிறா. என் பையன நெனச்சாத்தான் எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு’

அவன் முழுசாகக் கொட்டும்வரை அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். பின் பேசினாள்.

‘ஐயா, என்னால உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மத்தியஸ்தம் பண்ண முடியுமய்யா’

அவன் விரக்தியாய்ச் சிரித்தான்.

‘இல்ல தாயி, அந்த ஆண்டவனே வந்து அறிவுரை சொன்னாலும் அவ கேட்க மாட்டா. இவ்வளவு தூரம் வந்ததே பெருசும்மா. நீ கெளம்பு’

அவன் கைகூப்பினான்.

கனத்த இதயத்தோடு அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.


(தொடரும்)




Sunday, February 28, 2016

அப்பா வருவாரா? - 8

அத்தியாயம் - எட்டு


வஷிஷ்ட்டை நீங்கள் மறந்திருப்பீர்கள். அம்மா, அப்பா சண்டையில் பெரிதும் பாதிக்கப்பட்டவன் இந்த 5 வயதுக் குழந்தை. அவன் வகுப்பு நண்பர்கள் இவனுடன் பேச அவர்களின் பெற்றோர் தடை விதித்தனர். வீட்டிலும் அக்கம் பக்கத்துச் சிறுவர்கள் இவனைத் தவிர்த்தனர். பாவம் குழந்தை, செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவித்தான். அதை நினைத்துத் தனிமையில் அழுதான். தனிமை முதலில் பயமுறுத்தியது. பின்னர் அதுவே பழகிப்போனது. தன்னைத் தள்ளி வைத்த சமூகத்தின்மீது வன்மம் உண்டாயிற்று.
ஒரு மழை நாள் இரவு முழிப்பு வந்தது. அருகில் அம்மாவைத் தேடினான். காணவில்லை. அறையைவிட்டு வெளியே வந்தான். பக்கத்து அறையிலிருந்து வினோதமான ஒலிகள் கேட்டன. அந்தக் கதவைத் திறந்தான். வினோதமான செயல்களையும் கண்டான். கருமமே கண்ணாயிருந்த மாளவிகாவும் ஷங்கரும் இவனைக் கவனிக்கவில்லை. 

அவன் கண்ட காட்சி (சரி, சரி கருமாந்திரம்) மனதில் நன்கு பதிந்து கொண்டது.

அம்மா மீது வெறுப்பு உண்டாகியது. எல்லாப் பெண்களும் போகப்பொருட்கள் எனும் கருத்து ஆணித்தரமாக உருவானது.

அம்மா இவனைச் சில நாட்களில் தொலைவிலுள்ள ரெசிடென்சியல் ஸ்கூலில் சேர்த்தாள்.

அங்கு இவனை விடப் பெரிய பையன்கள் இவனை அடித்தார்கள். இவன் பொருட்களை எடுத்தார்கள். இவனைக் கேலிப் பொருளாக்கினார்கள். வார்டனிடம் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார்கள்.

இவன் நிறைய அழுதான்.

கொஞ்ச நாளில் எல்லாம் பழகியது.

புதுப் பையன்கள் வரும்போது இவனும் அதையே பண்ணினான். அதில் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

அம்மா இவனைப் பார்க்க எப்போதாவது வந்தாள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அங்கிள் அவளுடன் வந்தார்கள். இவனிடம் சம்பிரதாயமாக ஹாய் சொன்னார்கள். சொல்லி வைத்த மாதிரியே எல்லோரும் கையைத் திருப்பி மணி பார்த்தார்கள். உடனே அம்மா இவனை இறுக்கி அணைத்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு விடை பெற்றாள்.
லீவில் பாட்டியுடன் ஊரில் இருக்க வேண்டியதாயிற்று. அக்கம் பக்கத்தில் உள்ள பிள்ளைகள் இவனுடன் ஒட்ட மறுத்தார்கள். அப்படி ஒண்டிய ஒன்றிரண்டு பேரையும் அவர்களின் அம்மாக்கள் அடித்து இழுத்துப் போனார்கள்.

தனியாளாய் ஆற்றில் மீன் பிடிக்கவும், புல்வெளியில் வெட்டுக்கிளி பிடிக்கவும், மரமேறிக் குருவிக்கூட்டிலுள்ள முட்டை திருடுவதும் என தனக்குத்தானே ஒரு உலகத்தை வடிவமைத்தான். அதில் அவனே ராஜாவாக உணர்ந்தான்.

அப்பா வந்து தன்னைப் பார்ப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அம்மாவின் மேல் வெறுப்பு கூடிக்கொண்டே போனாலும் அப்பாமீது இன்னும் அபிமானம் இருந்தது.

அந்த நம்பிக்கையிலும் மண் விழுந்தது.

பாட்டியும் அம்மாவும் ஃபோனில் பேசியபோது காதில் விழுந்த தகவல்.

‘ஏன்டி இவளே, உன் வீட்டுக்காரன் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு அமெரிக்காவில செட்டில் ஆகப் போறானாமே?’

‘*** **** ****’

தெரியுமான்னு கேட்டா என்ன ஏன்டி வையிற’

‘*** **** ***’

சடாரென ஃபோன் வைக்கப்படும் ஓசை கேட்டது.

பாட்டி கோவத்துடன் வெளியே வந்தாள்.

இவனைக் கண்டவுடன் பொரிந்தாள்

‘நீ பண்ணின பாவம்தான்டா இவ வயித்தில வந்து பொறந்த. இன்னும் என்னென்ன கஷ்டமெல்லாம் படப் போறியோ தெரியல்லயே?’

வஷிஷ்ட்டுக்கு என்னமோ புரிவதுமாதிரி இருந்தது.




(தொடரும்)

Saturday, February 27, 2016

அப்பா வருவாரா? - 7

அத்தியாயம் - ஏழு

நான் சரோஜினிதேவி. எனக்கு இதை உங்ககிட்ட இப்ப சொல்லியே ஆகணும்.’

புதிதாக ஒரு குணச்சித்திரம் உள்ளே நுழைவது குழப்பமாகத்தான் இருக்கும். இவள்தான் மகாதேவனின் பெயர் கெட்டுப்போகக் காரணமாயிருந்த அந்த மகராசி.

இப்ப அவள் குரலிலேயே அவ கதைய சொல்லக் கேட்போம்.

‘நான் பக்கத்து ஊரு. எனக்கும் மாணிக்கத்துக்கும் கல்யாணம் ஆகி 2 வருஷத்தில பாம்பு கடிச்சு அவரு போய் சேர்ந்துட்டாரு. ஒரு வயசுல கைக்கொழந்தையோட நான் அல்லாடிப் போய்ட்டேன். பொறந்த ஊருலயும் என்னய சேர்த்துக்கல்ல. கூலி வேல செஞ்சு மானத்தோட வாழ்ந்துக்கிட்டு இருந்தேன்.  தனியாளா ஒரு பொம்பள வாழ்றது அவள விட ஊர்ல உள்ள சில மைனர்களுக்கு கஷ்டமா தெரிஞ்சிது. என்ன பலமுறை பலவந்தப் படுத்தினாங்க.பணத்தால மடக்கப் பார்த்தாங்க’

தண்ணி குடித்து விட்டுத் தொடர்ந்தாள்.

‘ஆனா, என்னய ஒரு சக மனுஷியா நெனச்சு அவுக வீட்டிலயே கூடமாட ஒத்தாச பண்ண தங்க வச்சுக்கிட்டாரு பெரியய்யா. நானும் அந்த வீட்டுப் பொண்ணுங்களுக்கு உதவியா இருந்தேன். வாழ்க்கை நிம்மதியா இருந்துச்சு. யார் கண்ணு பட்டதோ, அதுக்கும் அவ்வளவு சீக்கிரம் கேடு வருமின்னு நான் எதிர்பார்க்கல்ல’

பெருமூச்சு.

‘பட்டணத்திலிருந்து அய்யா புள்ள லீவுல வந்திருந்தாங்க. எல்லாரோடயும் சகஜமாப் பேசுவாங்க. ஒரு நாள் எல்லாரும் கோவிலுக்குப் போயிருந்தாங்க. நான் மட்டும் வீட்டுல. கெணத்தடியில குளிச்சிட்டு வரும்போது கால் வழுக்கி விழுந்திட்டேன்.’

மகாதேவன் வீட்டுக்கு வருமுன்னே எல்லோரும் கோவிலுக்குக் கெளம்பிப் போயிட்டாங்க. எல்லோரும் சேர்ந்து போவதாக ஏற்பாடு. போன எடத்தில் அவன் சைக்கிள் பஞ்சர். அதை சரி செய்து வருவதற்குள் அப்படி என்ன அவசரம் என்று புலம்பியபடி வீட்டுக்குள் நுழையப்போனவன் கிணற்றடியைப் பார்த்தான். திடுக்கிட்டான்.
அங்கே வீட்டுப் பணிப்பெண் மயங்கிக் கிடந்தாள். அவனுக்குக் காலும் ஓடவில்லை, கையும் ஓடவில்லை.

அவளை அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டு அருகிலுள்ள ஸ்டோர் ரூமுக்குள் நுழைந்தான்.

அவளைப் படுக்கவைத்து, உடைகளைத் தளர்த்தி முதலுதவி செய்தான். லேசாகக் கண் விளித்து மெல்ல முனகினாள்.

சரோஜினி தொடர்ந்தாள்.

‘முழிச்சுப் பார்த்தா என்னைய யாரோ கயிற்றுக் கட்டில்ல படுக்க வச்சிருந்தாங்க. பார்த்தா சின்னையா. அய்யான்னு எந்திரிக்கப் போனேன். கையமர்த்தி ஒண்ணும் பேச வேணாம்னு சைகையிலே சொன்னாங்க அவ்வளவு நெருக்கத்தில ஒரு ஆஜானுபாகுவான ஆண். என் இளமையின் ஏக்கம் என் புலன்களைக் கட்டிப் போட்டுடிச்சு. அப்படியே அவரை அணைச்சுக்கிட்டேன். என் செயல் அவரை ஆச்சரியப்படுத்திச்சு. விடு புள்ளன்னு என்னை உதறுனாரு. நான் விடாம அணைச்சுக்கிட்டேன். ஓங்கி ஒரு அறை விட்டாரு. எனக்குப் பொறி கலங்கிடுச்சு.என் காமமும் அடங்கிடுச்சு.’

விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மீண்டும் மௌனத்தை உடைத்தாள்.

‘அந்த நேரம் பார்த்து யாரோ வெளித்தாள்ப்பாளச் சாத்துற சத்தம் கேட்டுது. சின்னையா மூஞ்சி பேயறஞ்சமாதிரி ஆச்சு. நான் அவர் காலப்புடிச்சிக்கிட்டு அழுதேன். கொஞ்ச நேரத்தில யாரோ கதவைத் தெறந்தாங்க. வெளியே நெறைய பேரு, குசு குசுன்னு பேசிக்கிட்டாங்க’

பஞ்சாயத்து கூடியது. விதவைப் பெண்ணிடம் தப்பாக நடக்க முயற்சித்ததாக மகாதேவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அபராதம் விதிக்கப்பட்டு ஊரைவிட்டுத் தள்ளி வைக்கப்பட்டான்.

அந்த விதவைப் பெண்ணை மறுநாள் முதல் காணவில்லை.

பல வருடம் கழிந்து இன்றுதான் ரீ-என்ட்ரி.



(தொடரும்)

அப்பா வருவாரா? - 6

அத்தியாயம் - ஆறு 

உள்ளே நுழைந்தான்.

குழந்தை எங்கேயென்று கையால் சைகை பண்ணினான்.

தூங்கி விட்டானென்று சைகையில் பதில் கிடைத்தது.

ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்தான்.

எதிரில் மாளவிகா.

நைட்டி ஹவுஸ்கோட் சகிதம் இன்றுதான் அவளைப் பார்த்தான்.

கண்களில் சஞ்சலம் தெரிந்தது. மற்றப் பிரதேசங்கள் வெறியேத்தின.

பொறுமை மகனே என தன் சிந்தனைகளை அடக்கினான்.

‘சொல்லுங்க, எதாயிருந்தாலும் பரவாயில்ல. மனசில உள்ளத வெளியே கொட்டுனா, மனசு கொஞ்சம் அமைதியடையும்’

மௌனம்.

‘முதல்ல என்ன நீங்க,வாங்கன்னு கூப்பிடுறத நிறுத்துங்க, எனக்கும் கிட்டத்தட்ட உங்க வயசுதான்’

புன்னகைத்தான்.

‘சரி, மாளு மேல சொல்லு. என்னையும் பேர் சொல்லியே கூப்பிடலாம்.தப்பில்ல’

பெரு விரலைத் தூக்கி தம்ஸ் அப் சொன்னாள். தொடர்ந்தாள்.

‘தப்பு பண்ணிட்டனோன்னு தோணுது ஷங்கர். மகா ரொம்ப உத்தமன்னு நெனச்சு ஏமாந்திட்டேன். நம்ப வச்சுக் கழுத்தறுத்திட்டான்’

மௌனம்.

‘அது எப்படி தனக்கு வர பொண்டாட்டி மட்டும் வர்ஜினா இருக்கணுமின்னு எதிர்பார்க்கிற ஆம்பளைங்க தங்க ஒழுக்கம்பத்தி அலட்டிகிறதேயில்ல?’

தலையசைப்பு.

‘பொண்ணுங்க நெனச்சா என்ன வேணும்னாலும் பண்ணலாம், எவ்வளவு நாள்தான் நாங்க பொறுமையா இருக்கிறது?’

மௌனம்.

சம்மந்தா சம்மந்தாமில்லாமல் வசனங்கள் வெளிப்பட்டன. கோவம் குறையக் காத்திருந்தான்.

அடுத்தகட்டமான சுயபச்சாதாபத்திற்கு மாளுவின் மூட் மாறியது.

கண்ணீர் பெண்களின் மிகப்பெரிய ஆயுதம். ஆனால் அதை மிகவும் லாவகமாகத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த மிகச் சில ஆண்களுக்கே தெரிந்திருந்தது.

ஷங்கர் எழுந்தான்.

மெதுவாக மாளுவின் அருகில் சென்று அமர்ந்தான்.

கையை அவள் தோள்மீது வைத்து அவள் கண் பார்த்துப் பேசினான்.

      ‘முள்ளை முள்ளால்தான் எடுக்கணும் மாளு’

அவன் அருகில் அமர்ந்ததோ, தோளில் கை வைத்ததோ தப்பாகவே தோன்றவில்லை அவளுக்கு. மாறாக இது எல்லாமே இயல்பான ஒரு வடிகாலாகவே தோன்றியது.

மௌனம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் பச்சை விளக்கென உணர்ந்தான்.

நூல் நுழைய ஊசி இடம் விட்டது.



(தொடரும்)

அப்பா வருவாரா? - 5

அத்தியாயம் - ஐந்து

நான் ஷங்கர், இந்தக் கதையின் பிரதான வில்லன்.

ஆனா, நீங்க நெனைக்கிற மாதிரி நான் ஒண்ணும் தப்பான ஆளில்ல.
என்ன தப்புப் பண்ண வச்சதே இந்த சமூகம்தான். புரியல? இப்ப மேல படியுங்க.’

ஷங்கருக்கும் மகாதேவனுக்கும் ஒரே ஊர். ரெண்டு பேரும் பங்காளிங்க. மகாதேவன் குடும்பம் செல்வாக்கோடு இருக்க, ஷங்கர் குடும்பம் அவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல்.

அவர்கள் கடையில் கணக்கெழுதும் சாதாரண எழுத்தர் ஷங்கர் அப்பா.

ஷங்கர் அப்பாவுக்கு 4 பொண்ணுங்க, 2 பசங்க. குழந்தைச்செல்வத்தைக் கொடுத்த ஆண்டவன் அது போதுமென்று நினைத்து விட்டான் போலும்.

வறுமையின் பிடியில் தனது இளமைக்காலம் முழி பிதுங்கி நின்றதை இன்றும் பயத்துடன் நினைவு கூருவான் ஷங்கர்.

பசி எந்நேரமும் இவனை ஆட்டிப் படைத்தது. சோறு கிடைக்கும் எனும் ஒரே காரணத்துக்காகவே பள்ளிக்கூடம் போனவர்கள் பட்டியலில் முதலில் வருவான்.

ஆனால் அந்தப் பாழாய்ப் போன படிப்பு இவனுக்கு வரவேயில்லை.

இதைவிடக் கொடுமை இவன் பங்காளி மகாதேவன் படிப்பில் பல படிகள் முன்னேறி இருந்த விடயம்.

வீட்டில் எதுக்கெடுத்தாலும் அவனைப் பற்றியே பேசி இவனை மட்டம் தட்டுவதையே தன் பொழைப்பாகக் கொண்டிருந்தார் இவன் அப்பா.

கடனை உடனை வாங்கி இவன் அக்கா, தங்கைகளின் திருமணங்களை எப்படியோ முடித்து விட்டார் அப்பா.

அதற்கு மிகவும் உதவியது மகாதேவனின் குடும்பம். மற்றக் குடும்பங்களைப் போலில்லாமல் அடுத்தவர்க்கு உதவுவதை ஒரு கடமையாகச் செய்த, மிக நல்ல குடும்பம்.

மகாதேவன் படிப்பில் ரொம்பவும் சுட்டி. முன்னணி அரசு பொறியியல் கல்லூரியில் இலகுவாக இடம் கிடைத்தது. எப்படியோ முட்டி,மோதி ஷங்கர் உள்ளூர் கலைக்கல்லூரியைத்தான் தொட முடிந்தது. அதற்கும் மகாதேவன் குடும்பம் கணிசமாக நிதியுதவி பண்ணியது.

லீவில் ஊருக்கு வரும் வேளைகளில் மகாதேவன் ஷங்கர் வீட்டுக்கு வருவான். அவன் எல்லாரோடும் சகஜமாகப் பழகுவது இவன் குடும்பத்தார்க்கு ரொம்பவே பிடிக்கும். சின்னம்மா, தங்கச்சி,அப்பத்தா என அவன் எல்லாரோடும் ஒன்றிப்போவான்.

அவன் போனபின் ஒரே மகா புராணம்தான்.

ஷங்கருக்கு அது வசம்பாய்க் கசக்கும்.

எப்படி இவனைக் கவுக்கலாம் என்று யோசிக்கலானான்.




(தொடரும்)

Wednesday, February 24, 2016

அப்பா வருவாரா? - 4

அத்தியாயம் - நாலு

அன்று சென்னையில் நல்ல மழை.

வழக்கத்திற்கு மாறாக ஷங்கர் வரவில்லை. ஃபோன் பண்ணினான். மழையில் வண்டி ட்ராஃபிக்ல மாட்டிருச்சு, வர லேட்டாகும்னான். ரொம்ப சாரி கேட்டான்.

ஒரு மணி நேரம் சென்ற பின் மறுபடியும் ஃபோன். கீழே காத்திருந்தான். தெப்பலாக நனைந்திருந்தான்.

பார்க்க ரொம்பவே பாவமாக இருந்தது.

அன்று வீடு வர ரொம்ப நேரமானது.

பாவம் குழந்தை வஷிஷ்ட் பக்கத்து வீட்டிலேயே தூங்கிப் போயிருந்தான். சமையல் பண்ணி, அவனை எழுப்பி தூக்கத்தோடு ஊட்டி விட்டு, எல்லா வேலைகளையும் முடித்துப் படுக்க 11 தாண்டி விட்டது.

மழை விடாது பெய்து கொண்டிருந்தது.

மாளவிகாவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அவமானமாய் இருந்தது. ஆத்திரமாய் இருந்தது.
மகாதேவன்மேல் கொண்டிருந்த நம்பிக்கை எல்லாம் காணாமல்போய் ரொம்ப நேரமாகி இருந்தது.

தான் இவ்வளவு நாளும் மலைபோல் நம்பியவன் இப்படி ஒரு துரோகம் செய்வானென்று இவள் கொஞ்சமும் நினைக்கவில்லை.

ஊரில் ஒரு விதவைப் பெண்ணுடன் தொடர்பு வைத்துப் பின்னர் அது அம்பலமானவுடன், அசிங்கப்பட்டு அங்கிருந்து இங்கே வந்த கதையை ஷங்கர் கண்,காது,மூக்கு வைத்துப் போட்டுக் கொடுத்துவிட்டான்.

‘எப்படியெல்லாம் நல்லவன் மாதிரி நடிச்சி என்னை ஏமாத்திட்டான்?’ கோவத்தால் தூக்கம் வர மறுத்தது. பழி வாங்கும் எண்ணம் தலை தூக்கியது.

வன்மம் மனதில் தோன்றி அது மற்றவர் மீதும் பாய்ந்தது. குழந்தையைக் கடிந்து கொண்டாள். வேலைக்காரப் பெண்ணிடம் முறைத்துக் கொண்டாள். வயசான வாட்ச்மேனைச் சம்பந்தமில்லாமல் திட்டினாள். அலுவலகத்திலும் உறுமிகொண்டே இருந்தாள்.

வண்டியில் வரும்போது ஷங்கர் சகஜமாகப் பேச முயல அவனையும் கடித்து அனுப்பினாள்.

தூக்கம் வந்து தொலைப்பேனா என்றது.

‘கடஞ்செடுத்த நம்பிக்கைத் துரோகம், நல்லவன் மாதிரி நடிச்சு என்னை ஏமாத்திட்டான். என் வாழ்க்கையே போச்சு’

மனது கிடந்து அலை மோதியது.

கண் விழித்த போது நன்கு விடிந்திருந்தது. குழந்தையைக் காணவில்லை.

ஹாலில் டிவி சத்தம் கேட்டது.

நல்ல வேளையாக அன்று ஞாயிற்றுக் கிழமை, பள்ளி விடுமுறை.

சோம்பலுடன் ஃபோனை நோண்டினாள்.

வாட்ஸ் அப்பில் ஷங்கரின் குறுஞ்செய்தி இருந்தது. படிக்க மனதுக்கு இதமாக இருந்தது.
பளீரென வந்தனாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

ஆடு ஓநாயுடன் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தது.




(தொடரும்)

Tuesday, February 23, 2016

அப்பா வருவாரா? - 3

அத்தியாயம் - மூன்று

இவ மாளவிகா. க்ரியேடிவ் ஹெட், டோனி லூயி க்லோபல் வென்சர்ஸ்.

மகாதேவன் ஊருக்குப் போனதும் இவளுக்கு அழுகை, அழுகையா வந்திச்சு. குழந்தையைத் தூங்க வச்சிட்டு பாத்ரூமில போய் ஓன்னு அழுதா.

கல்யாணமான நாள் முதல் எங்கேயும் இவளை விட்டுட்டுப் போனதில்லை அவன்.

போனா சேர்ந்து போவாங்க, இல்லை வீட்டிலேயே முடங்கிடுவாங்க. குழந்தை, மனைவியென்று இவர்களைச் சுற்றியே அவன் வளைய வந்தது இவளுக்கு இப்ப தனிமையை எதிர் கொள்ள முடியாமல் பண்ணியது.

இவர்கள் திருமணம் காதல் மணமென்றாலும் இரு குடும்பங்களின் ஆதரவுடன் நடந்தது.

தொழில் சார்ந்த கருத்தரங்கொன்றில் இவளைக் கண்டு, மனம் தடுமாறி, காதலைச் சொல்ல நேரடியாக வீட்டுக்கு வந்து அப்பாவுடன் பேசியது எல்லாம் மீண்டும் மீண்டும் மனதில் ஓடியது.

இவளைவிட அதிர்ஷ்டசாலி இல்லையென்றுதான் இவள் தோழிகளும் பேசிக் கொள்வார்கள்.

மகா இல்லாத முதல் நாள் வஷிஷ்டைக் கிளப்பி ஸ்கூல் பஸ்ஸில் அனுப்பி விட்டுத் திரும்புகையில் ஷங்கர் காருடன் காத்திருந்தான்.

ஷங்கரை ஏற்கெனவே தெரிந்தபடியால், சினேகமாய்ப் புன்முறுவி வண்டியில் ஏறிக்கொண்டாள்.

சம்பிரதாயமான விசாரணைகளுடன் பயணம் தொடங்கி முடிந்தது. பரஸ்பரம் தொலைபேசி எண்கள் மட்டும் பறிமாறப்பட்டன.

இரவில் வாட்ஸ் அப்பில் ஒரு குட் நைட். இவள் அதைச் சட்டை செய்யவில்லை.

மறுநாள் காரில் போகும்போது இளையராஜா பாட்டு பிடிக்குமாவென்றான். இவளின் அனுமதியுடன் எம்பி3 ஒலித்தது. இனித்தது.

இரண்டு நாட்களின் பின் காப்பி சாப்பிடலாமாவென்று கேட்டு, அனுமதியுடன் காஃபி ஷாப்.

தன்னையுமறியாமல் அவன் நன்னடத்தையால் அவன் பக்கம் ஈர்க்கப்படுவதை அறிந்தாள்.
எச்சரிக்கை மணி முதல் முறையடித்தது.

கணவனின் பிரிவால் மனதில் தோன்றிய ஏக்கம் சாய்மானம் தேடுகிறதென்று அதை அலட்சியப்படுத்தினாள்.

இப்பொழுது ஃபேஸ்புக்கில். ஃபோனில் என்று அடிக்கடி தொடர்பு எல்லைக்குள்ளேயே இருப்பது இதமாயிருந்தது. 

நம்பிக்கை பல விஷயங்களைப் பகிரத் தூண்டியது.

சரியான நேரம் பார்த்து அஸ்திரத்தை எறிந்தான் ஷங்கர்.

வலை விரித்துவிட்டு வேடன் காத்திருந்தான்.

மான் தானாக வந்து சிக்கியது.



(தொடரும்)

Monday, February 22, 2016

அப்பா வருவாரா? - 2

அத்தியாயம் - இரண்டு

இவன் மகாதேவன், டீம் லீட், இன்ஃபொடெக் சொல்யூஷன்ஸ்

ஆச்சு. எல்லாம் முடிந்து போச்சு.

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்துச் சேர்ந்த மகாதேவனும் மாளவிகாவும் சட்டரீதியாகப் பிரித்து வைக்கப்பட்டார்கள்.

கண்ணிமைக்காமல் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட வைத்த தன் காதல் மனைவி இப்பொழுது கட்டெறும்பாகத் தெரிந்தாள்.

எப்படி வாழ்க்கை இப்படி மாறிப்போனது?

அதுக்கு நீங்க ஷங்கரப் பத்தித் தெரிஞ்சிக்கணும்.

ஷங்கர், மகாதேவனின் உறவுப்பையன், சென்னையில் அவனுக்குக் காலூன்ற உதவுனதே இந்த மகாதேவன்தான்.

அப்பொழுது தெரியாது தன்னோட மணவாழ்க்கைக்கு இவனே எமனாவான்னு.

எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்திச்சு.

ஜெர்மனியில் ஒரு மாதம் தங்கி முக்கியமான புரோஜெக்டை முடிக்க நிர்வாகம் இவனைத் தேர்ந்தெடுத்தபோது இவனுக்குப் பெருமை பிடிபடவில்லை.

மாளவிகாவையும் குழந்தை வஷிஷ்டையும் ஒரு மாதம் பிரிவது கவலை தந்தாலும் தொழில் ரீதியாகப் பல படிகள் முன்னேறும் வாய்ப்பு அவனை இந்த சவாலை ஏற்க வைத்தது.

மாளவிகாவின் அலுவலகத்தில் தினமும் அவளை விட்டபின்தான் இவன் அலுவலகம் செல்வது வழக்கம்.

அதற்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம் என யோசிக்கையில்தான் இந்த ஷங்கரின் உதவியை நாடலாமேயென இவனுக்குத் தோன்றியது.

மாளவிகா அதற்கு முதலில் மறுத்தாள். தன் நண்பியுடன் ஸ்கூட்டியில் செல்வதாக எவ்வளவோ சொன்னாள். இவன் கேட்டுத் தொலைச்சிருக்கலாம்.

ஒரு மாதம் கழித்து வந்தபோது ஃபேஸ்புக்,ட்விட்டர்,வாட்ஸ் அப்,வைபர் என எல்லா ரூபத்திலும் ஷங்கர் இவள் வாழ்வில் ஊடுருவியிருந்தது தெரிந்தது.

அதை விடப் பூதாகரமான பிரச்சினை இரண்டு நாளில் கிளம்பியது.

குழந்தை பள்ளிக்குப் போனதும் என்றும்போல மனைவியைக் கொஞ்ச முயல, வந்த நாள் முதல் முகம் கொடுத்துப் பேசாதவள் வெடித்தாள்.

‘என் மேல கை வச்ச, அப்புறம் அசிங்கமாயிடும். நல்லவன் மாதிரி நடிச்சு என்னை ஏமாத்திட்டியேடா பாவி!’

என்ன நடந்திருக்குமென்று யூகிக்கவே முடியவில்லை

இவன் அதிர்ச்சியில் உறைந்திருக்க வாசல் மணியடித்தது.

ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் மாளு.

      ‘மாளுக் குட்டி'

உள்ளே வந்தவன் அப்படியே அவளை அள்ளிக் கட்டி கொண்டான். அவள் திணற பின்னரே இவனைப் பார்த்தான்.

பேயறைந்தது போலானான்.

மாளவிகா பேசினாள்.

‘நீ ஏன் ஷங்கு அவனைப் பார்த்துப் பயப்பிடுற. இவன் பண்ணின துரோகத்துக்கு இந்த வீட்டுல நான் இருக்கவே கூடாது. சீக்கிரம் ஒரு லாயரைப் பார்த்து டைவோர்ஸ் வாங்கிற வழியப் பார்க்கிறேன்’

மகாதேவனுக்கு எல்லாம் புரிந்தது.



(தொடரும்)