Thursday, February 22, 2018

ஏன்?

பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லும் வாயாலேயே மாயப் பிசாசுகள் என்றும் சொல்லித் திரிவது?

சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று குரூரமாக சொல்வது?

பொம்பளை சிரிச்சாப் போச்சு புகையில விரிச்சாப் போச்சுன்னு சொல்லி சிரிப்பது?

உன்னைப் பெற்றவள்
அவளுக்குப் பிறந்தவள்
உனக்குப் பிறந்தவள் 
அவளைப் பெற்றவள்
அனைவரும் பெண்கள் ?

வாழ்வின் எல்லாக் காலகட்டத்திலும் 
ஆணுக்குப் பெண் துணை 
அத்தியாவசியம்?

இருந்த போதிலும் காழ்ப்புணர்ச்சி?

ஒரு வேளை காமத்தின் விரக்தி 
களிவிரக்கமாய் ? 

யாரோ எழுதிய கவிதை !

உன்னைப் பிடிக்க காரணங்கள் தேவையில்லை, காரணங்கள் தேடிச் செல்ல நானொன்றும் கவிஞனில்லை. உன் கண்களைப் காண்கையில் புதிதாய்ப் பிறந்த குழந்தை மனதில் தோன்றும் ; உன் சிரிப்பைக் கேட்டால் சிற்றருவியின் சிலிர்ப்பு முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் ; உன் புருவங்கள் வில்லின் வளைவுகளின் காரணமோ என்று எண்ணத் தோன்றும் ; உன் கருவிழிகள் கருவண்டுகளுக்கே பொறாமையூட்டும் ; உன் உதடுகள் இருக்குமிடம் தெரியாமல் இருந்துவிட்டுப் போகும் ஈரப்பதங்கள் ; உன் மூக்கை வர்ணிக்கப் பயமாக உள்ளது, உனக்குத் தும்மல் வந்து விடுமே!;  உன் கன்னம் வெள்ளிக் கிண்ணம் ; உன் நாசி வெண்ணையை வைத்தால் வழுக்கிச் செல்லும் அவ்வளவு நேர்த்தியான வளைவு ; உன் கூந்தல் கருமேகங்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு ; மொத்தத்தில் நீ ஒரு ராகமாலிகை, உன் நெஞ்சம் என் காதல் மாளிகை.