Sunday, September 24, 2017

வாழ்வின் விசனங்கள்


முகங்களைப் பார்க்க ஆவல், ஆனால் யாருக்கும் முகத்திரையைக் களைய எண்ணம் இல்லை. பாலியல் காலத்துப் பால் வடியும் முகங்களை எதிர்பார்த்த எனக்கு எதிர்ப்படுவதென்னவோ நடுத்தர வயதுடைய இறுக்கமான மனிதர்களே!  வாழ்வில் பலவற்றைப் பெற்றும், சிலவற்றை இழந்தும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு இலக்கை அடைந்திருக்கிறோம். அதனால் சமூகத்தில் போற்றப்படுகிறோம், ரகசியமாய் மனதுக்குள் தூற்றவும் படுகிறோம்! மனதில் விகழ்ப்பமில்லாமல் பழக எத்தனிக்கும் எளிய மனிதர்களை நேரம் இல்லையென்ற பொய்யான வார்த்தையால் மிகச்சுலபமாகக் கடந்துவிடுகிறோம். எல்லாருமே பொன்னும் பொருளும் ஈட்டும் போட்டியால் நேரங்களைத் தொலைத்து கொண்டிருக்கிறோம். கடைசியில் உடல் சோர்ந்து ஓய்வுக்கு ஏங்கும் வேளைகளில் இன்று யார் நலனுக்காக இரவு பகல் பாராது அயராது உழைக்கிறோமோ, அவர்கள் ரெக்கை முளைத்து வெகுதூரம் சென்றிருப்பார்கள். காலத்தைப் போற்றுவோம். மனிதநேயம் பேணுவோம்.


- வாழ்வின் விசனங்கள் – தோஹா – 30 ஏப்ரல் 2017

இயந்திர வாழ்க்கை

வளைகுடா வாழ்க்கையில் வெள்ளி விடுமுறை வரமும் சாபமும் சேர்ந்த ஒரு கலவை. காலைச் சிற்றுண்டிக்காக அருகிலுள்ள பிரபல உணவகத்திற்கு வருகை. உணவை மட்டும் சுவைக்காமல் சுற்றுப்புறம் பக்கமும் பார்வை செல்கிறது. 

முழுதும் மூடி மறைத்த பருத்த வெளுத்த அம்மையார், இறுக்கமான முகத்துடன் கணவர், முத்தாய் மூன்று குழந்தைகள்; சிரிப்பென்பதை அறிந்திடாத வயோதிபத்தை எட்டிப் பிடிக்கும் ரிச் மேன்; என்ன தின்கிறோம், எதுக்குத் தின்கிறோம் என்று கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஃபோனையே நோண்டிக் கொண்டிருக்கும் வாலிபன் ; மிதமிஞ்சிய அரிதாரத்தில் வந்தும் தன்னை யாரும் சீண்டவில்லையே என்ற எரிச்சலில் சத்தமாகப் பேசிடும் வடக்கத்தி ஆன்டி (கூடவே அப்புராணி அங்கிள்); பூரி மசாலாவை கரண்டியால் உண்ணத் தடுமாறும் பிலிப்பினோ ஜோடி; வயசுக்குச் சம்பந்தமில்லாமல் முக்கால் பேன்ட், கட் பனியனில் சீனியர் சிட்டிசன். இவர்கள் மத்தியில் பொங்கல், வடை கைகளால் துவம்சம் பண்ணும் நான் நிச்சயம் வேற்றுக்கிரகவாசியே.


-          இயந்திர வாழ்க்கை – தோஹா – 28 ஆப்ரல் 2017

பொய் முகங்கள்


சோகங்கள் தினமும் நெஞ்சோடு இருந்தும் சிரிக்க மறக்காத      முகம்

வெளியில் சிரித்து உள்ளே அழுதிடும் விளங்காத புதிரான          முகம்

சொல்ல நினைப்பதை சொல்லாமல் உள்ளே பரிதவித்த               முகம்

படித்தது பிடிக்காமல் பிடித்ததைப் படித்து மனமகிழ்ந்த               முகம்

கவலைகள் புரியாத கனவுகள் கலையாத களங்கள் அறியாத       முகம்

கையில் காசில்லா பசியின் நிரந்தரப் பிடியில் அல்லலுற்ற            முகம்

உப்பிட்டவரை உள்ளளவும் எண்ணி வியந்து புகழ்ந்த                  முகம்\

காலத்தால் ரணமாகிப் போயினும் அரிதாரத்தால் மிளிறும்           முகம்\

அணிந்திட்ட முகமூடிகள் எதுவென்று தெரியாமல் திணறும்     முகம்\

அவற்றைக் களையாமல் வெறுமனே பாசாங்கு செய்திடும்         முகம்\

எளியோரை எள்ளி நகையாடி ஏகத்துக்கும் எகத்தாளமிடும்        முகம்

பணம் தேடுதலில் பாதியிலேயே மனிதத்தை உதறிவிட்ட           முகம்

இதிலெல்லாம் சொல்லாமல் விட்ட எத்தனை கோடி                     முகம்



-          பொய்முகங்கள்  – தோஹா –  16 ஏப்ரல் 2017



வேடிக்கை மனிதர்கள்

கல்தேரா கல்தேரான்னு (ரெண்டு பேரில்ல, ஒருத்தர்தான்!) ஒரு ஆளு. சும்மா பார்க்க அந்த வாட்ச் கட்டுன அய்யா மாதிரியான தோற்றம். வேலை என்னமோ சூப்பர்வைசர்தான். குடுத்த வேலைய முடிக்கிறாரோ இல்லையோ தினமும் மாலை தண்ணி சாப்பிடாமக் கெளம்ப மாட்டாரு.
காங்கிரீட் முடிந்த மாலை வேளைகளில் நாங்கள் அனைவரும் தாக சாந்திக்காக அருகில் இருக்கும் பாரில் ஒதுங்குவது வழக்கம். ஆனந்தம் மேலிட்டால் மேசையில் தட்டிக் கொண்டு பாடுவார், சமயங்களில் ஆட்டமும் உண்டு. போதை கட்டுக் கடங்காமல் போனால் எப்படியாவது ஒரு ஆட்டோவில் அவரை இட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவது வழக்கம். மனைவியிடம் எவ்வளவு ‘வாங்கினாலும்’ மறு நாள் பணிக்கு வர அவர் தவறுவதேயில்லை. வீடு வாசல் தோட்டம் துரவு என்று நல்ல வசதியுடன் இருந்தாலும் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் வேலை செய்வதாகக் கதை அடிப்பார். உண்மைக் காரணம் வீட்டில் சுதந்திரமாகத் தண்ணிப் பாவனைக்குத் தடா. ஒரு நாள் நண்பர்கள் ஒரு பயணம் சென்று வந்த போது இவரை வீட்டருகே இறக்கி விடுகையில் ஒரு முழு பாட்டில் சாராயம் வண்டியிலிருந்து உருண்டோடித் தரையில் விழுந்து உடைந்தது. அன்று வெகு நேரம் அதனருகில் அமர்ந்து மனிதன் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். துணைக்கு அவர் ஆசையாய் வளர்த்த நாயும் ஊளையிட்டதாம்!


-          வேடிக்கை மனிதர்கள் – தோஹா – 23 ஏப்ரல் 2017

இயலாமையின் பரிதவிப்புகள்

எப்ப அந்த வண்டி வரும்?
எத்தன பேருக்கு இன்னிக்கு வேலை இருக்கும்?
வேலைக்கு கூலி ஒழுங்காக் கெடைக்குமா?
கெடைச்சாலும் அதை அந்த மேஸ்திரிப் பய முழுசாக் குடுப்பானா?
கெடைக்கிறதில அரிசி வாங்கிறதா, பருப்பு வாங்கிறதா?
பேரனுங்களுக்கு இனிப்பு வாங்க ஏதும் மிஞ்சுமா?
இனிப்பு கொடுத்தா ரெண்டும் அடிச்சுக்காம தின்னுமா?
அந்தச் சண்டைக்கும் மருமக நம்மளைத்தான் திட்டுவாளா?
மிஞ்சுற அஞ்சு பத்த முந்தானையில முடிஞ்சு வச்சா பத்திரமா இருக்குமா?
அதையும் பயபுள்ள லவட்டிக்கிட்டு நம்பர்க் கடைக்குள்ள பூந்திருவானா?
மக வயித்துப் பேத்தி முழுகாம இருக்காளா?
எங்கிட்ட ஒன்ணுமே இல்லேன்னு மக ஒரு தகவலும் சொல்லாம இருக்காளா?
ராக்காயி, செங்கமலம், பூங்கோதை போனமாதிரி நானும் விரசாப் போயிடுவேனா?
.
.
எப்ப அந்த வண்டி வரும்?


-          இயலாமையின் பரிதவிப்புகள் – தோஹா – 20 ஏப்ரல் 2017

டாஸ்மாக் கதைகள்

குடிப்பது நல்லதில்லைதான்.
எனக்கும் தெரியும்.
ஆனா, இந்தப் பழக்கம் ரொம்ப நாளாவே உடம்புல ஊறிப் போச்சு.
அலுப்பு நீங்கக் குடிச்சது போய் இப்ப குடிக்காட்டி அலுப்பா இருக்கு
கை நடுக்கம் நிக்கிறதுக்கு கட்டிங் அடிச்சாத்தான் சரியாயிருக்கு
கெழவியும் பொலம்பி பொலம்பி முடியாமப் போய் சேர்ந்திட்டா.
இருந்தவரைக்கும் கேட்காமலே எல்லாம் கெடச்சுது
இப்ப, கேட்டாலும் கெடைக்கல்ல.
ராத்திரி படுத்தா தூக்கம் வரல்ல. கொஞ்சம் போட்டாத்தான் வருது.
அப்புறமா கனவு வருது.
அதுல கெழவி வந்து எங்கூட வந்திருய்யான்னு கூப்பிடுறா.
போகோணும்.
ஆனா, அதுக்கு முன்னாடி ரெண்டு ரவுண்டு போட்டுக்கணும்.


-          டாஸ்மாக் கதைகள் – தோஹா – 1 ஏப்ரல் 2017

விவசாயிகளின் கண்ணீர்

முனுசாமி.
அப்பனும் ஆத்தாளும் ஆலமரம், அரசமரம்னு சுத்தி தவமாய்ப் பெத்த புள்ள.
செல்வச் செழிப்பில்லாட்டியும் சோத்துக்குப் பஞ்சமில்லாத பால்யம்.
காவிரிக் கரையில என்றைக்கும் பசுமையான வயல்வெளிதான் இவன் பாடம் படிச்ச பூமி.
ஆத்துல தண்ணி கொஞ்சங் கொஞ்சமாக் கொறைஞ்ச மாதிரியே வயல்வெளியும் சுருங்கிடிச்சி.
கூட இருந்த பய புள்ளைங்க வித்துப் போட்டு டவுனுக்குப்போய்ட்டாய்ங்க.
புள்ளைங்க படிப்புக்கு எல்லாத்தையும் வித்து இப்ப மிஞ்சுனது இந்த சொச்ச மண்ணுதான்.
மழையும் காலை வாரிடுச்சு. மானியமும் புட்டுக்கிச்சு.
மந்திரிக்கும் கவுன்சிலருக்கும் ஆத்துல தண்ணி வரப்படாது, அதுக்கு முந்தி அத்தனை மணலையும் வித்துடனும்.
கடன் கொடுத்த பேங்க் ஆபீசரு ஆளு வச்சு மிரட்டுறாரு. அவரு பிரச்சின அவருக்கு, பாவம்.
இதையெல்லாம் தாங்க மனசுலயும் தெம்பில்ல, உடம்பிலயும் உரமில்ல.
 ………. இறந்த போன விவசாயிகள் பேர்ப் பட்டியலில் இவர் பேரும் இருந்திச்சா?


-          விவசாயிகளின் கண்ணீர்  - தோஹா – 2 ஏப்ரல் 2017

குறும்புக்காரப் பசங்க

ரமேஷ், சுரேஷ் அண்ணன் தம்பி.
படிப்பில ரெண்டு பேருமே படு சுட்டி.
லீவு நாள்ள வெளிய கெளம்புனா இந்த வானம் முழுக்க மண்டையிலதான்.
அப்படியொரு விளையாட்டு.
வீட்டுல நுழைஞ்சோன்னே சண்ட தொடங்குனா மறுநாள் வரைக்கும் முடியாம நடக்கும்.
அம்மா மெரட்டிப் பார்த்தா, பாட்டி கெஞ்சிப் பார்த்தா, அத்த கிள்ளிப் பார்த்தா
எதுக்குமே நிக்காத சண்ட ஓய்ஞ்சது அப்பா சைக்கிள் சத்தம் கேட்டுத்தான்.
அதுக்குக் காரணம் கோவம் வந்தாக் கண்ணு மண்ணு தெரியாமப் போட்டு அடிப்பதில் அவருக்கு நிகர் அவரே.
ரெண்டு நாள் வெளியூர் பயணம் போறேன்னு நேத்துக் கெளம்பிப் போனாரு.
இவனுங்க ஆரம்பிச்சிட்டாய்ங்க.
பொறுக்க முடியாம வெளிய விட்டு அம்மாக்காரி கதவைச் சாத்திட்டா.
எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தானுங்க.
மூடுன கதவு மூடுனதுதான்.
இப்ப சூரியனும் உச்சிக்கு வந்தாச்சு.
பசி வரப் பத்தும் பறந்து போச்சு.
சண்டையும்தான்.


-          குறும்புக்காரப் பசங்க  - தோஹா – 6 ஏப்ரல் 2017

காதணி கலாட்டா

அம்மாவோட ஜிமிக்கி கம்மல்
அப்பா சுட்டுட்டுப் போய்
அப்பாவோட பிராண்டி பாட்டில்
அம்மா திவம்சம் பண்ணி…
பழிக்குப் பழி என்று கிளம்பி
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் புரிந்து வெற்றியும் பெற்ற
பெண்மணியின் கதை
இதைவிட சுருக்கமாச் சொல்ல
யாருக்கும் தோணல்ல
அதுக்கு ஆடிய ஆட்டம்
அள்ளிய லைக்குகள், ஷேர்கள்
எல்லாம் வேற லெவல்
ஷெரில் ஆர்மி அமைத்து
ஓவியாவையே ஓரங்கட்ட வைக்க
இந்த நாலு வரியின் பங்கு
பெருசு, இல்ல பிரம்மாண்டம்
கம்மலும் ஜிமிக்கியும்
சமத்துவத்தின் சின்னங்கள்!

காதணி கலாட்டா – தோஹா – 21 செப்  2017 

தினசரி அலம்பல்கள்

பசிக்கும் போது கிடைப்பதில்லை
கிடைக்கும்போது பசிப்பதில்லை
ருசித்துப் புசிவதில் பசியின் எல்லை
எங்கெங்கோ சஞ்சரிக்கும்
புசித்தபின் பசித்தவன் புலன்கள் அடங்க
பள்ளி கொண்டால் பேரானந்தம்
இன்று புசிப்பது பசிக்காக அன்றில்
ருசிக்காக அல்ல என்றாகி
வீட்டில் கிடைக்காததை வெளியில் தின்று
வீட்டில் உண்ணாததை வெளியாள் தின்று
இனங்காணா நோய்கள் எத்தனையோ
பிறழ்வுகள் பிரளயங்கள்
கடைசியில் விரக்தியால் விபரீதங்கள்
வீட்டில் உண்பீர்! வெளியில் வேண்டாம்!!
மனம் உடல் வளம் பெறும்!

         

-          தினசரி அலம்பல்கள் – தோஹா – 19 செப் 2017

 


பாலைநிலப் புலம்பல்கள்

ஒட்டகமே !
எந்தன் பிரியமான பெட்டகமே!
இந்தப் பாலை நிலத்துல
உன்னைப் போல வேற யாரு?
தண்ணியே குடிக்காம
பல மைல் தூரம் போவியாமே?
உனக்குத் தாகமே எடுக்காதா ராஜா?
குடிக்கிற தண்ணியெல்லாம் உன்
முதுகுத் திமில்ல சேமிப்பியாமே?
தாகத்துக்கு அதுதான் கை குடுக்குமோ?
எங்களுக்கும் அப்படித்தான்.
ஊர்ல நடந்த நல்ல விஷயங்கள்
மனசுல சேமிப்பாய் இருக்கு,
எப்பெல்லாம் மனசு சோர்வாகுதோ\
அப்பெல்லாம் அதைத்தான் நெனைச்சு
மனசை ஆற வுட்டுக்குவோம்.
பிறப்பால வேறாயிருந்தும்
நமக்குள்ள எவ்வளவு ஒற்றுமை?


-          பாலைநிலப் புலம்பல்கள் – தோஹா – 18 செப் 2017 

பெண்ணடிமைத்தனம்

பொண்ணு பார்த்த அன்னிக்கே
சொல்லிப்புட்டா  மகராசி
உன்னைய விட உன் நீட்ட முடிதான் தாயி
எனக்குப் புடிச்சிருக்குன்னு!
அன்னிக்கே அன்னியமாப் போனா
பிறகு ஒட்டவேயில்ல!
புருசனுக்கு சீக்கு வர நான் காரணமில்ல
ஆனா, பொண்ணாப் பொறந்த பாவத்துக்கு
 எல்லாமே என் தலையில!
மாமியார் நேர்ந்துக்கிறேன்னு 
சொன்னது என் முடிய
அப்படி என்னதான் பொறாமையோ ?
பார்த்துப் பார்த்து செஞ்சாலும்
வெடுக்கின்னு ரெண்டு வார்த்த சொல்லாட்டி
சோறும் செரிக்காது
இவ புடுங்கல் தாங்காமப் புருசனும் போய்
ஆச்சு இப்ப பல நாளு
ஆசை ஆசையா வளர்த்த கூந்தல்
அம்புட்டையும் அள்ளிக் குடுத்தாச்சு
கடங்காரி முகத்துல என்ன ஒரு சந்தோசம்
எனக்கில்லாதது ஒனக்கு மட்டும் எப்படி?
இப்ப அள்ளிக் குடிக்க இந்த ஆத்துத் தண்ணிதான்
நமக்கு மிஞ்சிச்சு!


-          பெண்ணடிமைத்தனம் – தோஹா – 18 செப் 2017