Sunday, October 23, 2016

நினைவஞ்சலி - செல்லத்துரை குமரேசன்

இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. 1994ல் ராஜரட்னம் - தேவி கல்யாணம் முடிந்து வரவேற்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடந்தபோது ஒரு 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்க்களமாகச் சுழன்று சுழன்று ப்ரேக் டான்ஸ் ஆடினான். யாரவன் யாரவன் என்று கேட்காத ஆளில்லை. அந்த அபரிமிதமான திறமைசாலிதான் குமரேஷ். அந்த வயதுக்கே உரிய இயல்பான குறும்புத்தனமும் சேர்ந்து கொள்ள அவனைப் பார்த்தவர்கள் எல்லோரையும் அவன் கவர்ந்ததில் வியப்பில்லை. சில காலத்தில் அவன் மாமா மகளைக் கைப்பிடித்த வேளையில் இன்னும் அவனுக்கு உறவு முறையில் நெருங்கி வரும் வாய்ப்பு அமைந்தது. காலம் அவனை அமைதியாக்கியிருந்தது. துள்ளலும் துடுக்குத்தனமும் நகர்ந்து கொள்ள பொறுப்புணர்ச்சி கூடியிருந்தது. பட்டப்படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டான். வாழ்க்கை நன்றாகப் பயணிக்கும் தருணத்தில் விதி விளையாடியது. கடும் தலைவலியால் அவதிப்பட்டு மருத்துவர்களால் மூளையை இயக்கும் நரம்பில் சிறு அடைப்பிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டும் தாயகம் திரும்பினான், கனவுகள் கேள்விக்குறியாகி நின்றன. அடிக்கடி வலிப்பு வரத் தொடங்கியதால் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்கள் வீட்டில் ஒரு நாள் அவனைக் கண்டேன். நோயின் தாக்கம் உடலை உருக்கியிருந்தாலும் நம்பிக்கையுடன் பேசினான். அந்தக் கண்களில் இருந்த உயிரோட்டம் நம்பிக்கையளித்தது. பின்னர் 5 வருடங்களுக்கு இந்தத் தொல்லை இல்லை என்றான பின் மீண்டும் லண்டனுக்குச் செல்ல முடிவு செய்தான். அவனை அனுப்பக் குடும்பத்தில் எதிர்ப்புக் கிளம்பினாலும் நம்பிக்கை வார்த்தைகளால் அவற்றை முறியடித்து மீண்டும் கனவுகளைத் துரத்த விமானம் ஏறினான். சென்ற வருடம் இலங்கைக்குச் சென்ற போது சுகவீனமுற்றிருக்கும் அவன் தந்தையாரைக் காணச் சென்றோம். இவனைப் பற்றிப் பேச்சு வந்தபோது விரைவில் அவனுக்குப் பெண் பார்த்துக் கல்யாணம் முடிக்க இருப்பதாக அவன் தாயார் சொன்னார். சென்ற வாரம் அவன் மரணித்த செய்தி இடியாய் இறங்கியது. குளியலறையில் பாரிய இதயச் செயலிழப்பினால் உயிர் பிரிந்ததாகத் தகவல். உடல் பரிசோதனைகளின் பின்னர் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் பத்து லட்சம் செலவாகும் என்றும் மேலதிக தகவல்கள். வயோதிப காலத்தில் புத்திர சோகம் ஓர் பேரிடி. எப்படி இதைத் தாங்கப் போகிறார்களோ தெரியவில்லை. அந்த சக்தியை இறைவன் வழங்க வேண்டும். அவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

Thursday, April 7, 2016

தாம்பரம் டு பீச் - 18

பதினெட்டு    -    கடற்கரை

09 : 01

மேரி காலியாகிப் போயிருந்த பெட்டியைப் பார்த்தாள். ஆங்காங்கே சிலர் தென்பட்டார்கள். எல்லோருமே வேலைக்குப் போகும் அவசரத்தில் இருப்பது தெரிந்தது. அடிக்கடி கைகடிகாரத்தைப் பார்த்துக் கொண்டும், கைபேசியில் பேசிக் கொண்டும் அமர்ந்திருந்தார்கள்.
மேரி ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள். ரயிலின் வேகத்துக்குக் காட்சிகள் ஓடின. சிறு வயதில் முதன்முதலாக ரயிலில் செல்லும்போது அதைக் கண்டு தான் வீரிட்டு அழுததை எண்ணிப் பார்த்தாள். சிரிப்பு வந்தது.
தன் எதிர் இருக்கையின் கீழே தற்செயலாகப் பார்வை போனது.
ஒரு பொட்டலம் தென்பட்டது.
என்னவாயிருக்கும் என்ற ஆர்வம் மேலிட, சற்றே குனிந்து அதனை எடுத்தாள்.
பிரபல இனிப்பகத்தின் பெயர் அச்சிடப்பட்ட பை. உள்ளே என்னவோ இனிப்பு இருப்பதுபோல இருந்தது. என்னதானென்று பார்ப்போமே என்ற ஆவல் மேலிட அந்தப் பையைப் பிரித்தாள்.
அதிர்ந்தாள்.
உள்ளே கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள். எல்லாமே 500 ரூபாய் தாள்கள்.
இவ்வளவு பணத்தைப் பார்த்தறிந்திராத மேரிக்கு தலை சுற்றியது.
பிரமை பிடித்தவள்போல சில நேரம் இருந்தாள்.
ரயில் தன் போக்கிலே இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
தன் கஷ்டங்களுக்கெல்லாம் ஆண்டவனாகப் பார்த்து அனுப்பி வைத்திருப்பாரோ என்ற எண்ணம் தோன்றியது. கஷ்டத்தில் தத்தளிக்கும் தனது குடும்பத்தை நினைத்தாள். இந்தப் பணம் அவர்கள் கஷ்டத்தைக் குறைக்கும். அத்துடன் இது திருட்டல்ல. அடுத்தவர்களை ஏமாற்றி அடைந்ததல்ல. முக்கியமாக யாரும் தன்னைப் பார்க்கவில்லை.
உடனே தலையை உலுக்கிக் கொண்டாள்.
இது ஏதோ தப்பான பணம் என்று உள்ளுணர்வு சொல்லியது. இதுவரை நடந்து முடிந்திருந்த சம்பவங்கள் கண் முன்னே வந்து போயின. முக்கியமாக அந்த இரண்டு முதியவர்களின் பேச்சு திரும்பத் திரும்ப மனதில் எதிரொலித்தது. தான் இந்தப் பணத்தை எடுத்தால் தனக்கும் தன் குடும்பத்துக்கும் நிச்சயமாக ஏதோ கேடு விளையும் என்று மனம் சொல்லியது.
கண் மூடி அந்தோனியாரை நினைத்தாள். பிரார்த்தனையில் ஐக்கியமானாள்.
கண் திறந்தாள்.
வண்டி வேகம் குறைந்து ரயில் நிலையத்தின் வருகையை உணர்த்தியது.
மேரி எழுந்தாள்.
வண்டி நின்றது.
இரண்டடி எடுத்து வைத்தாள்.
ஏதோ நினைத்துக் கொண்டவள்போல மீண்டும் தனது இருக்கையருகே வந்தாள்.
குனிந்து அந்தப் பையை எடுத்தாள்.
மெதுவாக வண்டியை விட்டு இறங்கினாள்.
நடந்தாள்.
அவள் கண்கள் எதையோ மிகவும் ஆர்வமாகவும், அவசரமாகவும் தேடின.
திடீரென்று பிரகாசமாயின.
வேகமாக நடந்து சென்று அந்தப் பையை அந்தத் திசை நோக்கி வீசியெறிந்தாள்.
மனசு முழுக்க மகிழ்ச்சியுடன் அந்தோனியாரைத் தரிசிக்கக் கிளம்பினாள்.
உலகச் சரித்திரத்தில் முதல் முறையாகப் பணம் எனும் அரிய வஸ்து குப்பைத்தொட்டியைக் கண்டது. நொந்தது.


(முற்றும்)

Tuesday, April 5, 2016

தாம்பரம் டு பீச் - 17

பதினேழு      -     கோட்டை

08 : 53 

திராவிடன் முகத்தில் ரத்தம் உறைந்திருந்தது. கைக்குட்டையை வைத்து அழுத்தியதால் ரத்தப் போக்கு நின்றிருக்க வேண்டும். அசூசைப்பட்டு அழுத்தித் துடைத்திருந்தால் இன்னும் ஆழமான காயம் ஏற்பட்டிருக்கலாம். நல்ல வேளை அப்படி அவர் அழுத்தித் துடைக்கவில்லை. இருந்தாலும் பிளேடின் கூர்மை ரத்தப் போக்கை உண்டு பண்ணியிருந்தது.

திருடர்களின் பலமே அடுத்தவரின் சஞ்சலம். தன் உடமையை அடுத்தவன் காபந்து பண்ணுவதை உணர்ந்து திடுக்கிடும் தருணங்கள் திருடனை அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி நகர வைக்கும். பொதுவாக இருவர் அல்லது மூவர் சேர்ந்தே தொழிலை அரங்கேற்றுவர். சம்பவத்தை ஒருவன் உணர்ந்து குரல் எழுப்பும் வேளையில் அனேகமாகப் பொருள் கை மாறிப் போயிருக்கும். சந்தேகத்துடன் அருகில் இருப்பவனைப் பிடித்துச் சோதனை செய்வது எந்தப் பயனையும் தராது. மாறாக அவனிடமிருந்து பழி சொல்லையும், அருகிலிருப்பவர்களின் ‘ஐயோ, பாவம்’ கோஷங்களையுமே பெற்றுத் தரும். அனேகமாக அடுத்த நிறுத்தத்தில் அந்தத் திருடன் இறங்கித் தன் சகாக்களுடன் கை கோர்த்து, அடுத்த இரையைத் தேடிச் சென்று விடுவான்.

ஆனால், இன்றைய சம்பவம் தனியொருவனால் மேற்கொள்ளப்பட்டது. காரணம் அவன் தாக்கப்பட்ட வேளையிலோ, பொருளைக் காபந்து பண்ணிக் கொண்டு செல்லும் பொழுதிலோ யாரும் அவனுக்குக் கை கொடுத்து உதவ வரவில்லை. ரத்தத்தைக் கண்டு பீதியடைந்திருக்கக் கூடிய நொடிகளைத் திருடன் மிகவும் நம்பினான். அந்த நிமிடங்களைத் தான் தப்பிக்கப் பயன்படுத்த முயன்றான். திராவிடன் எனும் ராணுவ வீரரின் சமயோசிதமும், அன்வர், எட்வர்ட் ஆகியோரின் துணிச்சலும் அதைத் தடுத்து விட்டது.

ராணுவத்தில் தமக்கு அளிக்கப் பட்டிருந்த பயிற்சியை எண்ணிப் பெருமிதம் கொண்டார்.
தொடர்ந்து அன்றைய நாளில் செய்ய வேண்டியிருந்த பணிகளை மனம் அசை போட்டது. மேலதிகாரியைக் கண்டு பேச வேண்டிய விடயங்களைத் தனது கைபேசித் திரையில் இன்னொரு முறை பார்த்துக் கொண்டார்.

ரயில்ப்பெட்டிகளில் இப்பொழுது ஜனநடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது.

மேரி ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள்.

தனது பிள்ளைகள் பற்றிய சிந்தனைகள் எழுந்தன.

பெரியவன் படிக்கும் பள்ளியின் ஃபாதர் இவளைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்தன.

    ‘நல்லாப் படிக்கிறான் உன் புள்ள. கவனம் கலையாமப் பார்த்துக்கோ. ரொம்ப நல்லா      வருவான்’

இதைக் கேட்க மனசுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருந்துச்சு. எபனேசர் வீட்டுக்கு வந்தோன்னே அவனிடம் இது பற்றிச் சொல்லிச் சிலாகித்தாள்.

    ‘நமக்கு செல்வத்தக்குடுக்காட்டியும் நம்ம புள்ளைக்கு நல்ல படிப்பக் குடுத்திருக்காரு      ஆண்டவன்’

மற்றவன் அவனை விட ரெண்டு வயசு சின்னவன். அம்மா செல்லம். இன்னும் இவளையே சுத்தி, சுத்தி வருவான். எப்ப பாரு வெளையாட்டுதான். அண்ணன் மாதிரி நல்லாப் படிக்கணும்னு சொல்லுவா.

    ‘போம்மா, எப்ப பார்த்தாலும் படிக்கச் சொல்லியே உயிரெடுக்காத’

மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

வண்டி நின்றது.

திராவிடன் இறங்கினார்.



(தொடரும்)

Sunday, April 3, 2016

தாம்பரம் டு பீச் - 16

பதினாறு      -    பூங்கா

08 : 50

பொதுவாக எழும்பூரில் இறங்கி தாம்பரம் நோக்கிச் செல்லும் வண்டியில் ஏறி விடும் நசீர் வாப்பா இன்று இறங்கவில்லை. அவருக்கு கிச்சாவை விட்டுவிட்டு இறங்க மனசு வரவில்லை.

கிச்சா அமைதியா உட்கார்ந்திருந்தார். கீழே தள்ளப்பட்டதில் நிலைகுலைந்துபோயிருந்தார். வழக்கமாய்ப் பாடிக் கொண்டிருப்பவர் இன்று வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையாக இருந்தார்.

      ‘என்ன கிச்சாண்ணே, மனசு ஒடஞ்சு போய்ட்டீங்க?’

நிலைமையைச் சகஜமாக்க எண்ணி நசீர் வாப்பா கேள்வி கேட்டார்.

‘இல்ல பாய், கீழ விழுந்ததில கொஞ்சம் அதிர்ச்சியானது உண்மைதான். ஆனா, அடுத்தவன் பொருளைக் காபந்து பண்ணுறதுல இருந்த வேகமும், அது கெடைக்கல்லன்னோன்னே அதுக்குத் தடையா இருக்கவங்கள தாக்குற வெறி எல்லாம் என் சுபாவத்துக்குப் புதுசாயிருக்கு. அதப்பத்தித்தான் யோசன பண்ணிட்டு இருந்தேன்’

‘என்ன பண்றது அண்ணே, இப்பத்தைய சமுதாயம் சுயநலமாத்தான் வளருது, சிந்திக்குது. அவன் கத்திய எடுத்து குத்தப் போனோன்னே எனக்கு மனசு ஒரு நிமிஷம் அப்படியே ஸ்தம்பிச்சுருச்சு. நல்ல வேளை மத்தத் தம்பி ஒரு உதை விட்டதுல கை தவறிப் போச்சு’

‘நமக்குக் கெடைக்க வேண்டியது எதுவோ அது கண்டிப்பாக் கெடைக்கும். நமக்குக் கெடைக்கக் கூடாதது எதுவோ அது கடைசிவரை கெடைக்காது. இது ஒரு படத்துல சூப்பர் ஸ்டார் சொல்லுவாரு’

‘உண்மைதான். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட்டா அது அழிவுலதான் கொண்டு போய் விடும்’

இவையனைத்தும் மேரியின் காதில் மிகத் தெளிவாக விழுந்தன. அந்தோனியாரைப் பற்றிய சிந்தனையுடன் இருந்தவள் இந்த வார்த்தைகளை உள்வாங்கினாள். பணம் இருந்தால் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தீரும். ஆனால் அளவுக்கதிகமான பணம் நிம்மதியைக் குலைக்கும். அதிலும் அடுத்தவன் பணத்துக்கு ஆசைபட்டால் அது கண்டிப்பாக கேடு விளைவிக்காமல் விடாது. இதில் அவள் மனம் உறுதியாக இருந்தது.

எட்வர்ட் சிந்துஜா மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். காதல் வயப்பட்ட இருவர் எப்படியிருப்பார்களோ அவ்வாறு இருந்தது அவர்கள் நிலை. பேச்சு குறைந்து போய், பார்வையாலேயே பேசிக் கொண்டார்கள்.

எட்வர்ட் மனதில் இவ்வளவு நாட்களும் இவளுடன் விடு பட்டுப் போன பொழுதுகளை எப்படியெல்லாம் ஈடு கட்டலாமென்ற யோசனை ஓடியது.

சிந்துஜா மனதிலோ இவனைத் தன் வீட்டில் அறிமுகப் படுத்தி அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி எழுந்தது.

ரயில் வேகம் குறைந்து மேடையில் நின்றது.

இருவரும் இறங்கினார்கள்.

கூடவே நசீர் வாப்பாவும் கிச்சாவும்.


(தொடரும்)


Saturday, April 2, 2016

தாம்பரம் டு பீச் - 15

பதினைந்து    -    எழும்பூர்

08 : 47

நியாஸ் கண்ணில் ரயில் தென்பட்டது. என்றைக்குமில்லாது இன்று போலீஸ் நடமாட்டம் கொஞ்சம் அதிகமாக இருப்பதை உணர்ந்தான்.

ராஜாபாதருக்குச் சொன்னதுபோல புத்தகக் கடையின் அருகில் போய் நின்றான்.

ரயில் நின்றது. குப்பையாக மக்கள் வந்து வெளியே விழுந்தார்கள். அதே அளவில் ஏறி உள்ளே போய் விழுந்தார்கள்.

அலுவலக நிறுத்தத்தில் அன்வர் மெதுவாக இறங்கினான்.

பொதியைச் சுமந்து கொண்டு ராஜாபாதரும் பிளாட்பாரத்தில் அடிவைத்தான். அவன் கண்கள் நியாஸைத் தேடின.

சொன்னது போலவே அந்தப் பிரபலமான புத்தகக் கடை வாசலில் அவன் தென்பட்டான்.

திடீரென்று அவனைப் போலீஸ் நாய் ஜெல்டா வழி மறித்தது.

பயந்தே போனான்.

அதன் கூடவிருந்த அதிகாரி அவனிடம் பையில் என்ன என்று கேட்டான். இவனுக்குப் பீதியில் வாய் வரண்டு போய் வார்தைகள் உளரல்களாக வெளியேறின.

இவன் ஒரங்கட்டப்பட்டான். பை ஒரு ஓரத்தில் வைத்து ஜெல்டாவால் முகரப்பட்டது. முகர்ந்து முடித்த அது கால்களால் எதையோ பற்றியிழுத்தது.

ஸ்பீக்கர் என்று கூறப்பட்டிருந்த, இவனும் நம்பியிருந்த அந்தக் கருவியின் உள்ளேயிருந்து சின்னச்சின்ன பிளாஸ்டிக் உறைகள் வெளிப்பட்டன. அதில் ஒன்றை எடுத்துப் பிரித்துப் பார்த்தான் வேறொரு அதிகாரி. லேசாக முகர்ந்து அருகில் நின்ற சகாவிடம் தலையை ஆட்டி என்னமோ சொன்னான்.

ராஜாபதரிடம் அந்த அதிகாரி நெருங்கி

‘ஆன்டி நார்கோட்டிக்ஸ் ஆக்ட்ல உன்னைக் கைது செய்கிறோம். எங்ககூட ஸ்டேஷனுக்கு வந்து எல்லாத்தையும் சொல்லிட்டா உனக்கு நல்லது’

ராஜாபாதருக்குத் தலை சுற்றியது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. திடீரென்று நியாஸ் ஞாபகம் வந்தது.

‘சார் எனக்கொண்ணும் தெரியாது சார். அவன்தான் சார் இத எங்கிட்ட கொடுத்து பத்திரப்படுத்தச்சொன்னான்.’

அவன் கை காட்டிய திசையில் பலர் நின்றிருந்தார்கள். ஆனால் நியாஸ் எங்கோ மாயமாய் மறைந்திருந்தான்.

‘சார், அங்கதான் நின்னுக்கிட்டு இருந்தான் சார். வேணா நான் ஃபோன் போட்டு அவங்கிட்ட பேசுறேன்’

அவசரமாகத் தனது ஃபோனை எடுத்து நியாஸை அழைக்க விழைந்தான்.

      ‘நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்சமயம் பாவனையில் இல்லை’

மெதுவாகக் காவலர்களால் வெளியே அழைத்துச் செல்லப் பட்டான்.

அதனை அடுத்த பிளாட்பாரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த நியாஸ் வேறு ஒரு ஃபோனில் யாரிடமோ சொல்லத் தொடங்கினான்.

ரயில் கிளம்பியிருந்தது.



(தொடரும்)

Thursday, March 31, 2016

தாம்பரம் டு பீச் - 14

பதினான்கு    -    சேத்துப்பட்டு

08 : 43

கூட்டம் அலைமோதி இறங்கியது. மீண்டும் வேறு முகங்கள் உள்ளே ஏறின. இடங்களைப் பிடிப்பதில் அக்கறை காட்டின. தத்தமது வேலைகளில் மூழ்கின.

சிந்துஜா எட்வர்ட் அருகில் சென்றாள். அவன் இவளைக் கண்டு புன்னகைத்தான்.

      ‘எப்படி இருக்க சிந்து?’

      ‘நல்லா இருக்கேன், நீ?’

      ‘அதுதான் பார்த்தியே, இன்னும் கொஞ்ச நேரத்துல பரலோகம் போயிருப்பேன்’

அப்படிச் சொன்னது அவளுக்குப் பிடிக்காமல் போகவே இரண்டு கைகளாலும் தனது வாயை பொத்தி, தலையை ஆட்டி அப்படிச் சொல்ல வேண்டாமென்று அவனைப் பணித்தாள்.

அவன் அவள் கைகளைப் பிடித்து மெதுவாக கீழே இறக்கி விட்டான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதன் பின்னர் அவர்களிருவருக்கும் தங்களைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதே மறந்து போனது.

மேரி இப்படி ஒரு சம்பவத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. திடீர்னு இப்படி நடக்க என்ன காரணம் என்று யோசித்தாள். நல்ல நேரம் அந்தப் பையனுக்கு ஒண்ணும் ஆகல்ல. அதுக்கு மானசீகமாக இறைவனிடம் நன்றி கூறினாள். அடுத்தவங்க பொருள்மேல ஆசைப் படுவது எந்த விதத்தில நியாயம்னு அவளுக்குத் தெரியல்ல. அதிலயும் திருடறது பெரிய பாவம். கொலைசெய்வது அதைவிடப் பாவம். மனம் முழுக்க அந்தத் திருடனுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கச் சொல்லி பிரார்த்தனையில் ஈடுபட்டது.

திராவிடன் சற்று நிலைகுலைந்து போயிருந்தார். இருப்பினும் ராணுவப் பயிற்சி அவரை சகஜமாக இருக்க வைத்தது. முகத்தில் ரத்தப்போக்கை நிறுத்தக் கைக்குட்டையை வைத்து அழுத்தியிருந்தார்.

அன்வருக்கு களைப்பாக இருந்தது. கைகலப்பில் ஈடுபட்டதனால் சட்டையும், பேன்டும் கசங்கிப் போயிருந்தன. இந்தக் கோலத்தில் எப்படி அலுவலகம் போவது என்று யோசித்தான்.

ராஜாபாதருக்கு ஃபோன் வந்தது. அதை எடுத்துப் பார்க்கவே பயந்துபோயிருந்தான். அருகில் இருந்தவர் இவனை உலுக்கியவுடன்தான் சுதாகரித்துப் பேசினான்.

      ‘வந்திட்டிருக்கேன்’

      “----------“

      ‘இப்ப வந்திரும், நீ ரெடியா இரு’

      ‘-----------‘

மறுமுனையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

வெறுப்பாக இருந்தது. ஏதோ வேண்டாத வேலையில் தான் மாட்டிக்கொண்டதாக மனசு கெடந்து அடித்துக் கொண்டது. ஒரு தம் பிடித்தால் தேவலாமென்று தோன்றியது. எழுந்து போக முடியாதபடி பொதி தடுத்தது. தன்னைத்தானே சபித்து கொண்டான்.

காத்திருந்தான்.



(தொடரும்)

Wednesday, March 30, 2016

தாம்பரம் டு பீச் - 13

பதின்மூன்று     -     நுங்கம்பாக்கம்

08 : 40


கீழே விழுந்திருந்த கிச்சாவைக் கைத்தாங்கலாக அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்து ஆசுவாசப் படுத்தி கொண்டிருந்தார் நசீர் வாப்பா.

பையை வாங்கி உள்ளே வைத்ததில் கை வலித்தது மேரிக்கு. அத்துடன் படபடப்பு வேறு. அந்தோனியாரை நினைத்து அப்படியே இருக்கையில் சாய்ந்து இளைப்பாறினாள்.

எட்வர்ட்டும் அன்வரும் அந்தப்பையை எடுத்து பத்திரப் படுத்தினார்கள்.

அப்பொழுதுதான் எட்வர்ட் ஒன்றைக் கவனித்தான்.

இதுவரையில் அவனைக் கொஞ்சமும் சட்டை செய்யாதிருந்த சிந்துஜா அவனை நேசப்பார்வை பார்த்தாள்.

இது போதாதா அவனுக்கு? மிகவும் உற்சாகத்துடன் இயங்க ஆரம்பித்தான்.

கன்னத்தில் பிளேட் கிழித்து ரத்தம் சொட்டியபடியிருந்த திராவிடனை அணுகி அவருக்கு முதலுதவி செய்தான். அப்படியே எட்டி மேரியிடம் நன்றி சொன்னான். பரபரவென்று நசீர் பாய் அருகில் சென்று கிச்சாவை சமாதானப்படுத்தினான்.

இது அனைத்தும் அந்தப் பெட்டியின் வேறொரு முனையிலிருந்து ஸ்தலத்துக்கு குணா வருமுன் மின்னல் வேகத்தில் நடந்திருந்தது.

அவன் கோலத்தைக் கண்டு அவன் காவல்துறையைச் சார்ந்தவன் என்று அன்வருக்குப் புரிந்தது. நடந்ததை தெளிவாக அவருக்கு விளக்கினான்.

சகஜ நிலைக்குத் திரும்பியிருந்த திராவிடன் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அந்தப் பையில் என்ன இருக்கும் என்று எல்லோருக்கும் ஆவல் இருந்தாலும் குணா எச்சரிக்கையாகச் செயல்பட்டார்.

தனது அலைபேசியில் முதலில் கோடம்பாக்கத்து ரயில் நிலைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு சுப்புவின் அங்க அடையாளங்களை விவரித்தார். பின்னர் சந்தோஷைத் தொடர்பு கொண்டு ஸ்ரீகுமார் பற்றியும் அவன் தவற விட்ட பை பற்றியும் தகவல் பெற்றார்.

பொதுமக்கள் இவை எதிலும் பட்டும் படாமல் என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்ப்பதிலும், அதைப் பற்றி தங்கள் அறிவுக்கெட்டியபடி விமர்சிப்பதிலும் நேரம் கடத்தினார்கள். கிச்சாவின் நிலை கண்டு பரிதாபப்பட்ட சிலர் எட்வர்டையும், அன்வரையும் பாராட்டினார்கள். பொதுவாக எல்லோரையுமே குணா சமயத்தில் உதாவாமைக்காகக் கடிந்து கொண்டார்.

இத்தனையும் நடக்கையில் ராஜாபாதர் மட்டும் பயந்து போய் உட்கார்ந்திருந்தான். தன்னிடம் இருக்கும் பொருளுக்கும் இப்படி ஏதாவது நடந்து விடுமோ என்ற எண்ணம் அவனை வியர்க்க வைத்தது. அதைவிட நிசாருக்குப் ஃபோன் பேசவும் அச்சப்பட்டான். தான் ஒன்று பேச வேற ஏதாவது நடந்து விடுமோ என்றபடி ஜன்னல் வெளியே வேடிக்கை பார்க்கலானான்.

சிந்துஜாவுக்கு எட்வர்டின் மேலிருந்த கோவம் பறந்து போயிருந்தது. அவன் இப்படி ஒரு வீரச் செயலில் ஈடுபடுவானென்று கனவிலும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கத்தியால் குத்தப் போவதைப் பார்த்து அப்படியே ஆவென்று கத்திவிட்டாள். நல்ல வேளையாக அன்வர் மின்னல் வேகத் தாக்குதலால் அதைத் தடுத்து விட்டான். எப்படியாவது எட்வர்டிடம் பேச வேண்டுமென்ற உந்துதல் அதிகரித்தது.

ரயில் நிலையம் வந்துவிட்டதை மக்களின் பரபரப்பு உணர்த்திற்று.



(தொடரும்)


Tuesday, March 29, 2016

தாம்பரம் டு பீச் - 12

பன்னிரண்டு    -    கோடம்பாக்கம்

08 : 38

தன்னை முறைத்துப் பார்த்தவன் சம்பந்தமில்லாமல் வேறொருத்தனை அறைந்ததையும், அதைத் தொடர்ந்து அவனை இழுத்துக் கொண்டு போனதையும் பீதியுடன் பார்த்தான் ராஜாபாதர்.

மடியில் கனம் இருந்தால்தான் மனதில் பயம் இருக்கும் என்று அப்பத்தா அடிக்கடி சொல்வார்கள், ஏன் தனக்கு இந்தப் பழமொழி ஞாபகம் வந்து தொலைக்கிறதென்று அவனுக்குள் குழப்பம்.

ரயில் மீண்டும் வேகமெடுத்து வேகம் குறைத்து மீண்டுமொரு ரயில் நிலையத்தின் வரவைப் பிரதிபலித்தது.

மீண்டும் ஒரு சலசலப்பு.

ரயில் நிற்கும் முன்னரே இருக்கையின் அடியில் இருக்கும் பையை எடுக்க முனைந்தான் சுப்பு. இறுக்கமாக ஒரு பிடி அவன் கைமீது விழுந்தது. உதறிவிடப் பார்த்தான். இறுக்கம் அதிகமானது. உடனே தனக்குப் பழக்கமான தற்காப்பு முறையைக் கையாண்டான்.

திடீரென்று திராவிடனின் முகத்தில் நாக்குக்கடியில் பதுக்கியிருந்த பிளேடை உமிழ்ந்தான். அருவருப்பில் சடாரென்று கை அந்த எச்சிலைத் துடைக்க முனைய முகத்தில் ரத்தம் பீரிட்டது.

அந்தத் தருணத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணிய சுப்பு பையை இழுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேற முனைந்தான். அந்தக் களேபரத்தில் கைக்குட்டை விற்றுக் கொண்டிருந்த நசீர் பாய்மீது மோதினான். அவர் அல்லாவே என்று கீழே விழுந்தார். திராவிடன் சுதாரித்து அவனைப் பிடிக்க முனைகையில் அவன் இரண்டடி முன்னேறியிருந்தான்.

வாசலை அடைந்து விட்டான். நசீர் பாய் கண்ணில் அங்கிருந்த கிச்சா தென்பட்டார்.

      ‘அவனை மடக்குங்க கிச்சாண்ணே!’

கிச்சா முன்னால் சென்று கொண்டிருந்த சுப்புவை அப்படியே கட்டிக் கொண்டார். சுப்பு இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் முட்டியை இறுக்கி பின்னோக்கி ஒரு குத்து விட்டான்.

      ‘அம்மா’

அலறிக்கொண்டே கீழே சாய்ந்தார் கிச்சா.

ஒரு பார்வையற்ற வயதானவரைத் தாக்கியத்தைக் கண்டதும் அதுவரையில் சிந்துஜாவை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டு நின்ற எட்வர்ட்டுக்கு கோவம் தலைக்கேறியது. பாய்ந்து போய் ரயிலை விட்டு வெளியேறியிருந்த சுப்புவை பின்னாலிருந்து தாக்கினான். அந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத சுப்பு கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் எழுந்தான். சரக்கென்று தன் பையிலிருந்து கத்தியை உருவினான். அதற்குள் அன்வர் கொடுத்த உதையில் கத்தி கீழே விழுந்தது. எட்வர்ட், அன்வர் என இருவர் தன்னைக் குறி வைப்பதைக் கண்ட சுப்பு, அவர்களை விட்டு விட்டுப் பையுடன் கம்பி நீட்ட மெதுவாக நகர்ந்தான். உடனே எட்வர்ட் பையை நோக்கிப் பாய, அன்வர் சுப்புவின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

ரயில் நகரத் தொடங்க எட்வர்ட் பையை எடுத்து ரயிலின் ஜன்னலில் வைத்து

‘யாராச்சும் பிடிச்சுக்கோங்க!’  என்று கத்தினான்.

இந்தக் களேபரத்தைக் கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மேரி உடனே அதனை உள்ளே இழுத்தாள்.

அன்வரிடம் உதை வாங்கிய சுப்பு கீழே விழுந்து, எழுந்து சுதாகரிப்பதற்குள் அன்வரும், எட்வர்டும் வண்டிக்குள் ஏறினர்.

ரயில் வேகமெடுத்தது.

கூட சபித்துக் கொண்டே ஓடி வந்த சுப்பு விரைவில் ஒரு புள்ளியாகி மறைந்தான்.



(தொடரும்)

Monday, March 28, 2016

தாம்பரம் டு பீச் - 11

பதினொன்று    -   மாம்பலம்

08 : 36

செபஸ்டின் வண்டியிலிருந்து சட்டென்று இறங்கினான். அதே வேகத்துடன் ஓடிச் சென்று சந்தோஷ் குறிப்பிட்ட பெட்டியில் ஏறினான்.

இவனைக் கண்டதும் சந்தோஷ் வேகமாக ஸ்ரீகுமாரின் அருகில் சென்றான்.

      ‘ஹலோ மிஸ்டர், உங்க பைய கொஞ்சம் செக் பண்ணனும்’

ஸ்ரீகுமார் மிரண்டான். ஆனாலும், தைரியமாக எதிர்க் கேள்வி கேட்டான்.

      ‘ஞிங்கள் ஆராக்கும், எண்டே சாமான சோதிக்க?’

சந்தோஷ் ஆங்கிலத்துக்கு மாறி, தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான்.

தன்னை ஒரு தமிழன் அப்படிச் செய்வதை ஸ்ரீகுமார் விரும்பவில்லை. தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் என்னமோ உளறினான். அதற்குள் சந்தோஷ் நெருங்கி பையில் கையை வை…க்…க முயல……..

      ‘நகருடா பட்டி’

ஸ்ரீகுமாரிடமிருந்து வந்த சொல்லின் அர்த்தம் என்னவென்று சந்தோஷுக்குத் தெரிந்திருந்தது அவன் தூரதிர்ஷ்டம். பளாரென்று ஒரு அறை விழுந்ததில் அவன் பொறி கலங்கிப் போனான். எழுந்தவன் ஒரே அமுக்காக அமுக்கப்பட்டான். அதற்குள் செபஸ்டியனும் வந்து விட இருவரும் சேர்ந்து அவனை இழுத்துக் கொண்டு வெளியேறினார்கள். கூடவே அந்தப் பையையும் எடுத்துக் கொண்டார்கள்.

அருகில் இருந்த ஒருத்தனை எதுக்கு இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்று பெட்டியில் இருந்த எல்லோரும் சலசலத்தார்கள். அந்த இடத்தைப் பிடிக்க முண்டியடித்தார்கள். இடம் கிடைத்தவர் அருகில் இருந்தவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டார். என்னங்க பிரச்சினன்னு கேட்டு, நமக்கேன் பொல்லாப்பு என்று கையை விரித்தார்.

எதிர் சீட்டில் இருந்த திராவிடன் சீட்டுக்கு அடியில் என்னமோ இருப்பதைக் கண்டார். இழுத்துக் கொண்டு செல்லப்பட்டவன் ஏதோ சட்ட விரோதச் செயலில் ஈடுபட்டவன் போலும், அதுதான் மஃப்டியில் உள்ள காவலர்கள் அவனை வசமாகப் பிடித்து விட்டார்கள் என்று தோன்றியது. அது என்ன பொருளாக இருக்கும் என்று யோசிக்கலானார்.

அதையே அருகிலிருந்த ஒருவனும் கவனிப்பது அவருக்குத் தெரியவில்லை. அவன் இவரைப் போலல்லாமல் பொருளைக் கபளீகரம் செய்யும் நோக்கிலேயே அதனைப் பார்த்தான். அந்த சீட்டில் உள்ளவர் எழுந்தவுடன் தானும் நகர்ந்து அந்த இருக்கையைத் தனதாக்கும் முயற்சியில் ஈடுபட்டான் சுப்பு. அது தோல்வியில் முடியவே தனது பார்வை அந்தப் பொதிமேல் படும் தூரத்தில் நின்று கொண்டான். அடுத்து நம்ம ஏரியா, அங்க இதை எப்படியும் லவட்டிடலாம்னு அவன் மனதில் பட்டது.

சந்தோஷும், செபஸ்டீனும் ஸ்ரீகுமாரை முறையாகக் கவனிக்கக் கொண்டு போகுமுன் மற்ற மூவருக்கும் தகவல் அனுப்பி விட்டார்கள். குணா உடனே ஓடி வந்து அந்தப் பெட்டியில் ஏறிக் கொண்டான்.

ரயில் கிளம்பியது.



(தொடரும்)

Sunday, March 27, 2016

தாம்பரம் டு பீச் - 10

பத்து     -    சைதாப்பேட்டை

08 : 33

இறங்குவோர் நெருக்கியடித்துக் கொண்டு இறங்கினார்கள். அதேயளவு கூட்டம் திரும்பவும் ஏறியது.

ரயிலில் கூட்டம் குறைந்தபாடில்லை.

ராஜாபாதருக்கு ஏன் ரயிலில் வந்தோமென்று இருந்தது. பேசாமல் வண்டியிலேயே போயிருக்கலாமென்று தோன்றியது.

நியாசுக்கு ஃபோன் போட்டான்.

      ‘நீ சொன்னேன்னு ரயில்ல வர்றேன் பாரு, என் புத்தியச் சொல்லணும்’

      ‘------‘

      ‘என்ன, ஒரு மாதிரியாப் பேசுற? ஒடம்புக்கு ஏதும் சரியில்லையா?’

      ‘-------‘

      ‘பொருள் எல்லாம் பத்திரமாத்தான் இருக்கு. நான் கவனமாத்தான் இருக்கேன்’

      ‘------‘

      ‘’சரி,சரி நான் இன்னும் பத்து, பதினஞ்சு நிமிஷத்துல ரீச் ஆகிடுவேன்’

நிமிர்ந்து பார்த்தவன் ஒரு நிமிஷம் அதிர்ந்து போனான். யாரோ ஒருவன் இவனையே முறைச்சுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தோரணையில் போலீஸ் வாடை அடித்தது. என்னமோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாக உள்ளுணர்வு சொன்னது. பெரியவர் ஒருவர் பாடிக் கொண்டிருந்தார்.

      ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே’

சந்தோஷ் திறந்து மூடிய ஸ்ரீகுமாரின் அந்தப் பையினுள்ளே ஒரு பிரபலமான இனிப்பகத்தின் இலச்சினை பொருந்திய உறைகளைக் கண்டார். இவ்வளவு உறைகளை இவன் ஏன் மெனக்கெட்டு இந்த ரயிலில் எடுத்துச் செல்கிறான் என்ற கேள்வி எழுந்தது. அந்த இனிப்பகத்துக்குச் சென்னைப் பெருநகரிலேயே பதினைந்து கிளைகள் இருந்தன. அப்படியிருக்கையில் எதற்கு இதனை ரயிலில் சுமக்கிறான் என்ற ஐயம் எழுந்தது. ஒருவேளை இவன் அந்த உறைகளை சப்ளை செய்பவனாக இருக்கலாம் என்று எண்ணினான். மீண்டும் அவனை நன்கு நோட்டம் விட்டான். ஆள் பார்க்க நன்றாகவே இருந்தான். ரேபான் கண்ணாடி, கேசியோ ஸ்போர்ட்ஸ் வாட்ச், தங்க பிரேஸ்லட், நைக்கி ஷூ, ஐ ஃபோன் எல்லாம் அவனை மேல்மட்டத்து ஆளென்று பறைசாற்றியது. என்னமோ ஒன்று சரியில்லையென்று மனதுக்குப் பட்டது. உடனே மனதில் அம்மாவை நினைத்தார். எப்போதெல்லாம் மனதில் கலக்கம் ஏற்படுமோ அப்போதெல்லாம் இவ்வாறு செய்வது இவன் வழக்கம். அவ்வேளைகளில் மனதில் ஒரு தெளிவு பிறக்கும். இன்றும் அவ்வாறான தெளிவு பிறந்தது.

தனது அலைபேசியில் ஒரு குறுந்தகவலை அனுப்பினார்.

பதில் வந்தது.

மீண்டும் ஒரு தகவலை அனுப்பி விட்டுக் காத்திருந்தார்.

ரயில் வேகமாக ரயில் நிலையத்தில் நுழைந்தது


(தொடரும்)

Saturday, March 26, 2016

தாம்பரம் டு பீச் - 9

ஒன்பது       -     கிண்டி

08 : 30

தமிழ்நாடு காவல்துறைசார் உத்தியோகத்தஸ்தர்கள் நால்வர் ரயிலில் ஏறினார்கள். அவர்கள் பெயர்கள் அவசியமில்லை. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணி மிகவும் முக்கியமானது. தலைமைக் காரியாலயத்திலிருந்து அதி ரகசியமான தகவல் ஒன்று அவர்கள் சார்ந்த காவல்நிலையப் பொறுப்பதிகாரிக்கு வந்திருந்தது.

காலையில் அவசரமான ஒரு கூட்டம் நடந்து முடிந்திருந்தது. சென்னை ரயில்களில் வெடிகுண்டு வைக்கும் ஒரு சதித்திட்டம் பற்றி அலசி ஆராயப்பட்டது. உடனடியாக ஒவ்வொரு காவல்நிலையத்திலிருந்தும் தனிப்படைகள் ரயில் மற்றும் ரயில் நிலையப் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டன. வெடிகுண்டைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் குழு இவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் என்று கூறப்பட்டது. மிக முக்கியமாக இந்தத் தகவலைப் பொதுமக்களிடம் கசிய விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டிருந்தார்கள்.

எந்த ரயிலில், எந்தப் பெட்டியில் யாரால் என்ற மேலதிக விபரங்கள் கிடைக்கும் பொழுது பகிரப்படும் எனும் உத்தரவாதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்ட நால்வரும் ஒவ்வொரு பெட்டியில் ஏறிக்கொண்டார்கள். அவர்களுடன் வந்த இன்னொரு குழு ரயில் நிலையப் பாதுகாப்பைப் பலப்படுத்த ஆயத்தமானது.

மாற்றுடை தரித்திருந்த காரணத்தால் இவர்களை அடையாளம் காணுதல் சிரமமாய் இருந்தாலும், பரிச்சயப்பட்டவர்களுக்குச் சட்டெனப் புரிந்தது.

ஒவ்வொரு காவல்நிலையத்திலிருந்தும் இவ்வாறு காவலர்கள் எல்லா ரயில்களிலும் ரோந்து வருவதும், சந்தேகத்துக்கிடமானவர்களை வளைத்துப் பிடிப்பதும் சுலபமான காரியமில்லை. ஒரு வேளை தகவல் தவறாய்க்கூட இருக்க வாய்ப்பிருந்தது. ஆனால், அப்படி ஏதாவது துப்பு துலங்கினால் அதன்மூலம் பல உயிர்கள் காக்கப்படும் என்பது மட்டும் உண்மை.

கூட்டமாக இருந்த பெட்டிகளில் தம்மைப் பொருத்திக் கொண்டார்கள். உன்னிப்பாக சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டார்கள். தடயத்திற்காகக் காத்திருக்கலானார்கள்.

சந்தோஷ் ஏறிய பெட்டியில் பல தரப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள். கண் தெரியாத ஒருவர் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். கைக்குட்டைகளை ஒருவர் வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தார். பெண்ணொருத்தி ஜன்னலோரமாக அமர்ந்து தனது அலைபேசியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். சற்றே தள்ளி நின்றிருந்த ஒருவன் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான். மிகவும் மிடுக்கான தோற்றத்துடன் ஒருவன் அமர்ந்திருந்து சிந்தனை வயப்பட்டிருந்தான். கண்ணை மூடி ஜெபத்திலீடுபட்டிருந்தாள் ஒரு மாது. இன்னொருவன் பெரிய மீசையுடன் அமர்ந்திருந்தான். கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலி மின்னியது. ராணுவ வீரன் போன்ற ஒருவன் தன் அலைபேசியில் ஏதோ தகவல் தேடிக்கொண்டிருந்தான். ஒருத்தன் முன்னாள் தமிழக முதல்வரின் உருவம் பதித்த மோதிரம் அணிந்திருந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் காட்சியளித்தனர். இதில் எங்கே போய்த் துப்புத் துலக்குவதென்று ஒரே மலைப்பாக இருந்தது.

சிந்தனை வயப்பட்டிருந்தவரை வினோதமான ரிங்டோன் ஈர்த்தது.

      ‘ஹல்லோ’

      ‘----‘
      ‘இன்னும் கிட்டியில்லா. இவட கிண்டி’

      ‘----‘

      ‘யான் அறியும்’

      ‘----‘

      ‘ஞான் பின்னே விளிக்கும்’

சென்னையில் தமிழ் தவிர மற்ற அனைத்து மொழிகளும் நன்கு பேசப் படுகின்றன என்று எண்ணிக் கொண்டார். அலைபேசி அழைப்பைத் துண்டித்த ஸ்ரீகுமார் தனது காலடியில் இருந்த பையைத் திறந்து பார்த்தான். அவ்வேளை உள்ளேயிருந்த பொட்டலங்கள் காவலர் சந்தோஷ் கண்ணுக்குத் தென்பட்டன.

அவர் போலீஸ் மூளைக்கு ஏதோ ஒன்று சரியாய்ப் படவில்லை.



(தொடரும்)