வாழ்வில்
சில தருணங்கள் நம்மை நேருக்கு நேர் உற்று நோக்கி இனி என்ன செய்யப் போகிறாய் என வினவும்.
அது பள்ளிப் படிப்பை முடித்த தினம், கல்லூரியில் பட்டம் வாங்கிய ஒரு மாலை, மனையாள்
தேர்வுக்கு அளிக்கப்பட்ட 5 நிமிடங்கள், பெற்றோரின் பிரிவையறிந்த வேளை, குழந்தைகளின்
ஜனன பொழுதுகள் என நீளும். சமீப காலத்தில், சுமார் 1 1/2 வருடத்திற்கு முன் தொழில் பறிக்கப்பட்டபோது
அந்தச் சூழல் சற்றுப் பயமுறுத்தியது என்னமோ உண்மை. வயதானாலே வாய்ப்புகளும் குறைந்துவிடும்
எனும் நிதர்சனம் வீட்டிலிருக்கும்போது நன்கு விளங்கியது. மனைவிக்கு என்றும் என்னை விட
தெய்வ நம்பிக்கை அதிகம். நாம் யாருக்கும் கெடுதல் செய்யாவிடில் நமக்குக் கெடுதல் நிகழாதென்பது
எனக்கு என்றும் தாரக மந்திரம். இருந்தும் சில நல்லுள்ளங்களின் ஆலோசனைப்படி பிள்ளையாரப்பனைத்
தரிசித்து வந்தால் நல்லது நடக்கும் என்று அருகிலுள்ள வரசித்தி வினாயகர் கோவிலுக்குச்
செல்லத்தொடங்கினேன். மனைவி ஒரு படி மேலே போய் சங்கடசதுர்த்தியன்று அவர் தரிசனம் பெற
என்னை ஒரு முறை அழைத்துப் போனாள். நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறைத்தீர்ப்பு. விரைவில்
வெளியூரில் தொழில் புரியப் பணியாணை என்னைத்தேடி வந்தது. கணேசனார் கை விடவில்லை. இன்று
அவரை நன்றியுடன் நினைவுகூருகிறேன். வணக்கம் தல.