சிரித்தது கண்களா இல்லை இதழ்களா
நான் கவிழ்ந்து வீழ்ந்தது
அந்தப் புடவை கட்டிய பாங்கிலா?
கனவுகளும் கற்பனைகளும்
ஓ(ட்)டிய ஆறு மாதங்கள்
பின் இனித்த ஒரு நாள் எமது மணநாள்
முதலிரவு மற்றவர்க்கு களிப்பு
எமக்கு ?
நமது மணவாழ்க்கை தொடர்ந்தது வேடிக்கையாய்
நான் பாலகுமாரன் என்றால் நீ பால்காரன் என்பாய்
சுஜாதா என்றால் முறைத்து நடிகையா என்பாய்
இரவில்,இருட்டில் என் ஆசைகளை நான் சொல்ல
அவை அந்தச் சுவர்களுக்கென எண்ணிய நீ
எப்போ துயில் கொண்டிருப்பாய்
இந்தியா என்றாவது ஜெயிக்கும் நாட்களில்
வெளிவேலைகள் நிச்சயம் எனக்காக உன் வசம்
நான் நேற்று சொன்னதை நீ மறந்தாலும் உன் பால்ய
பள்ளித்தோழி பற்றி எனக்கு எல்லாம் தெரியும்போல
எப்படி உன்னால் மட்டும் பேச முடிகிறது?
மற்ற அழகான தோழிபற்றிக் கேட்டுவிட்டால்
மட்டும் கண்களில் ஒரு கோவம் !
வேற்றுமையில் ஒற்றுமையாய் நமக்கென
குழந்தைகள் இரண்டானபின்னும் என் ஏ(க்)க
விரதத்தில் உனக்கு இன்னுமா சந்தேகம்?
இருந்தும் என்ன, இன்றும் உன்னைப்
புடவையில் பார்க்கையில்
உன் கண்களைப் பார்க்கையில்
உன் சிரிப்பைப் பார்க்கையில்
என் மனம் ஒரு முறை, இன்னமும்
நின்றுதான் துடிக்கிறது !
பின்குறிப்பு : இது கவிதை வடிவமாவென்று சரியாகத் தெரியவில்லை. மனதில் ஓடிய எண்ண அலைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் ஒரு முயற்சியென்பது சரியான விளக்கமாக இருக்கும்.