Wednesday, April 15, 2015

இரு வார விடுமுறை - இந்தியா/இலங்கை


ஒரே பரபரப்பாக உள்ளது. இன்று இரவு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம்  கொழும்பு சென்று, ஒரு மணி நேரத்தில் மாற்று விமானம் ஏறி நாளை காலை சென்னையைச் சென்றடைவேன். ஏப்ரல் 16 என் மனங்கவர் மங்கையின் பிறந்தநாள் என்பதுதான் இன்று பயணிப்பதற்கான முக்கிய காரணம், வயது... இன்னும் இருபத்தைந்துதான், கல்யாணமான நாள் முதல் அதுமட்டும் மாறவே இல்லை. இனியும் மாறுமென்றும் தோணவில்லை. இன்று வீடு மாறுகிறார்கள். பிள்ளைகளின் பள்ளிக்கருகில் குடியிருப்பதில் உள்ள அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. ஏற்கனவே இருந்த வீட்டிலிருந்து பள்ளிக்குத் தனியார் வாகனத்தில் செல்ல வேண்டும். இது சில நேரங்களில் பெரும் மன உளைச்சலைத் தரும் விடயம் என்பது பள்ளி செல்லும் பிள்ளைகளைப் பெற்றோருக்கு நன்கு தெரியும். மேலும் தற்போதைய (உபயோகமாக ஒன்றுமே செய்வதற்கில்லாத) வீட்டு உரிமையாளரின் பிக்கல்,பிடுங்கல்கள் சகிப்புத்தன்மைக்கே சவால் விடும் நிலைக்குச் சகதர்மிணியைத் தள்ளி விட்டன. சுயமாக நமக்கென ஒரு வீடு என்பது பல மத்தியதர வர்க்க மக்களின் ஒரு அங்கமான எமக்கும் இன்றுவரை வெறும் கனவே. அந்த வேலைகள் முடிந்த கையோடு இலங்கைப் பயணம். மகள் 10ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதி ஓய்வாக இருக்கும் தருணமிது. மகனாரும் ஒரு சில தினங்களில் தனது ஆண்டிறுதிப் பரீட்சைகளை முடித்து விடுவார். மனைவியாரின் (பெருங்) குடும்பம் அங்கு குடியிருப்பதாலும், அங்கு சென்று வந்து 3 வருடங்கள் ஆகி விட்டமையாலும், முக்கியமாகச் சென்னை வெய்யிலில் இருந்து தப்பிப்பதற்காகவும் ஒரு மாத காலம் அங்கே களிக்க உத்தேசித்துள்ளோம். என்ன, பணி நிமித்தம் நான் மாத இறுதியில் இங்கு வந்து விடவேண்டும். அதற்குள் பிள்ளைகளுடன் சில இடங்களைப் பார்த்து, என் பள்ளித் தோழர்களைக் கண்டு மலரும் நினைவுகளையும் மீட்டிவிட்டு வரலாமென்ற எண்ணம். இதில் முக்கியமாகச் சமூக வலைத்தளங்களிலிருந்து கட்டாய ஓய்வெடுத்துக் குடும்பம், மற்றும் நிஜ நண்பர்களுடன் பொழுதுகளைப் போக்குவது என்பது எனக்கு நானே விதித்துக்கொள்ளும் சுயகட்டுப்பாடு. இரண்டு வார ஒய்வின்பின் மீண்டும் சந்திப்போம். வாழ்க வளமுடன். 

No comments:

Post a Comment