Tuesday, November 24, 2015

சென்னையும் மழையும்

மழைன்னா மழை, அப்படியொரு கனமழை. சாதாரணமா அரைமணி நேரம் பெய்தாலே ரோட்டெல்லாம் தண்ணி தேங்கி விடுகிற சிங்காரச் சென்னையின் சாலைகள் இந்த மழையால் சின்னா பின்னமாகி விட்டன. பள்ளிகளுக்கெல்லாம் தொடர் விடுமுறை அறிவிச்சுட்டாங்க. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருக்காங்க. இதுவரையில் மழைக்கு கிட்டத்தட்ட நூறு உயிர்கள் பலியாகியிருக்கு. கடலூர் மாவட்டத்தில் எத்தனை கிராமங்கள் முற்றிலுமாக நீரால் சூழப்பட்டிருக்கு, அங்கே எத்தனை உயிர் இழப்புக்கள் என்பது இன்னும் கணக்கெடுக்கப்படவில்லையென்பது இந்த இன்டர்னெட் யுகத்தின் பெருஞ்சோகம். சென்னையைச் சுற்றியும் பல இடங்களில் மக்களைப் படகுகளில் சென்று மீட்க வேண்டியிருந்தது. தெருக்களில் ஆளுயரத்துக்கும் மேலாக நீர் நிறைந்ததால் பலரால் வெளியே நடமாட முடியவில்லை. ஒரு வேளை உணவுக்காக, மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு இருந்தவர்களில் சிலர் பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல பதவி வகிப்பவர்கள். அதிகாரிகளும், பணியாளர்களும் தம்மால் இயன்ற அளவு மக்களின் துயர்துடைக்க இயங்கினாலும், அவர்களால் தொடர் மழைக்கு ஈடு கொடுப்பதென்பது மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாகக் காவல்துறை, தீயணைப்புப்படை, மின்வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் போன்ற அரச நிறுவனங்கள் 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டிய நெருக்கடி நிலை. இதுவரையில் அவர்கள் செய்த பல நல்ல பணிகளை விடுத்து செய்ய மறந்த, இன்னும் முயன்று கொண்டிருக்கும் பணிகளை மட்டுமே மேற்கோள் காட்டி ஊடகங்கள் குற்றம் சாட்டுவது எவ்விதத்திலும் நியாயமாகத் தோன்றவில்லை. இதையே சாக்காக வைத்து சில அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுவதும் வெட்கக்கேடு. ஊரே வெள்ளக்காடாக மாற யார் காரணம்? பேரிடர் மேலாண்மை என்பது என்னவென்று இதுநாள்வரை அறியாமல், தெரியாமல் மெத்தனமாக இருந்தமைக்குத் தரும் விலை என்றே இதை எடுத்துக் கொண்டாலும், அந்தப் பழியை யார் ஏற்பது? ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் அடுத்த வருடம் தேர்தலை எதிர் கொள்ள இருக்கிறது. இந்நிலையில் நீர்ப்பாதைகளின் தூர்வாரும் நடவடிக்கைகளை மழைக்கு முன்னர் கோடை காலத்தில் செய்திருந்தால் பாதிப்புகளை ஒரளவாவது குறைத்திருக்கலாம். செய்தார்களா? இல்லை. செய்ததாகக் கணக்கு மட்டும் காட்டினார்கள். இன்று தொலைக்காட்சி விவாதங்களில் சென்னையில் மழையால் எந்தப் பாதிப்புமே இல்லையென்று சிலர் கற்பூரத்தை அணைக்காத குறையாகச் சத்தியம் செய்வது அறியாமை + ஆணவத்தின்  உச்சம். எதிர்க் கட்சிகளும் தத்தமது ஆட்சிக்காலத்தில் இதையேதான் செய்தார்கள். இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இந்த மெத்தனம் மட்டுமே. இன்று பிரபல கல்வித் தந்தைகளாகத் தம்மைப் பிரகடணப்படுத்திக் கொண்டுள்ள முன்னாள் அரசியவாதிகளின் கல்லூரிகளும், பள்ளிகளும் இன்று தண்ணீரில் மிதப்பது ஏன்? நீராதாரங்களையெல்லாம் வளைத்துப் போட்டு காசு, பணம் , துட்டு, மணி பார்த்தீர்கள். ஆனால், உங்களால் அந்த இயற்கையுடன் பேரம் பேச முடியவில்லையே? உங்களுக்கு இப்பவாச்சும் புரிகிறதா, அற்ப மானுடப் பதர்களே ! மழைக்குத் தன் அன்னை ஏரியைத்தான் தெரியும். காணாமல்போன தன் அன்னையைக் களிப்புடன் கட்டிகொண்டது குழந்தை. திருந்துவீர்களா? # எது நடந்தாலும் இணையத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. வாழ்க தமிழ்நாடு !

No comments:

Post a Comment