Tuesday, July 16, 2013

அஞ்சலி – T M சௌந்தர்ராஜன்


எனக்கு அப்பொழுது 10 வயதிருக்கும். அவன்தான் மனிதன் என்றொரு சிவாஜி கணேசன் படம். வாழ்வில் சக மனிதர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் மகிழ்ச்சியடையும் கதாபாத்திரத்தை மிகவும் பிடிக்க ஒரு காரணம் அதில் இடம்பெற்ற பாடல்கள். குறிப்பாக அதைப் பாடிய பாடகரின் குரலினிமை. அந்த மதிப்புக்குரிய மாமேதை மறைந்த T M S அவர்கள். 60/70 களில் அனைத்து முன்னணி நாயகர்களும் இவர் குரலில்தான் திரையில் பாடினார்கள். எல்லோருக்கும் அந்தக் குரல் அற்புதமாக இயைந்தது. தத்துவப்பாடல்கள், பக்திப்பாடல்கள், சோகப்பாடல்கள், காதல்பாடல்கள் என அனைத்து கானங்களும் இனித்தன. பிற்கால இசையமைப்பளர்கள் புதுக்குரல்களை அறிமுகப் படுத்திப் பல நூறு பாடல்களைப் பதிவு பண்ணினாலும் இவர் குரலுக்கு ரசிகர்கள் கூடினார்களேயன்றிக் குறைந்தபாடில்லை. இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இவர் குரல் அற்புதமான சோக கீதம் பாடியது. பின்னர் ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக வாய்ப்புகளும் குறைந்தன. இருந்தாலும் அரசியல் மேடைகளிலும், திருமண வரவேற்புகளிலும் இவர் பாடல்கள் விடாமல் ஒலித்தன. இறுதிக்காலத்தில் தான் பெற்ற செல்வங்களால் சொல்லொனா மனத்துயரம் கொண்டு தம்முயிரை மாய்க்க முயன்ற செய்தி தற்கால இளைஞர் சமுதாயத்தின் சுயநலப்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இறுதியாகத் தனது 93வது வயதில் இயற்கை எய்திய இந்த வெண்கலக்குரலோன் தமது பாடல்கள்மூலம் என்றும் வாழ்வார். அவர் ஆதமா சாந்தியடையட்டும்.

2 comments:

  1. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...

    ReplyDelete
  2. அருமையான வரிகள்,வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

    ReplyDelete