Saturday, December 12, 2015

ஏன்?

மழைவெள்ளம் தலைநகர் சென்னையைத் திக்கு முக்காடச் செய்த வேளை. சிறியவர் முதல் பெரியவர்வரை தம்மால் முயன்றதைக் கொடுத்து அடுத்தவருக்கு உதவ முன்வந்தனர். வெளி மாநிலங்களில் உண்டியல் ஏந்தி அந்தத் தொகையையும் சென்னைக்கும், கடலூருக்கும் அனுப்பியவர்களும் ஏராளம். நடிகர்களில் சித்தார்த் மற்றும் பிக் எஃப்.எம் பாலாஜி போன்றோர் சமூக வலைத்தளங்களின் மூலம் தகவல்களைப் பகிர்ந்து பல உதவிகளைச் செய்தவாறு களப்பணியிலும் நேரடியாக இறங்கினர். சத்தமில்லாமல் மயில்சாமி, இமான் போன்ற காமெடி நடிகர்களும் தம்மாலான உதவிகளைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டின்பால் பேரன்பு கொண்ட, ஒவ்வொரு படத்திலும் தமிழகத்துக்கும், தமிழனுக்கும் வண்டி வண்டியாக நன்றி சொல்லும் உச்ச நட்சத்திரம் வெறும் பத்து லட்சம் கொடுத்தார் என்று அவரின் பக்த கோடிகளில் யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு வெள்ளம் புகுந்த தெருக்கோடியிலிருந்து முகநூலில் பகிர்ந்தார். நடிகரின் தரப்பிலிருந்தோ மௌனம். தன்னுடன் 'கபாலி' படத்தில் நடிக்கும் ராதிகா ஆப்தேயுடன் நெருங்கி நிற்கும் புகைப்படப் பதிவொன்று சமகாலத்தில் வெளியானது. முணு முணுப்புக்கள் அதிகரிக்கவே, தமிழக முதல்வரிடம் 10 கோடி அளித்தார் என்று மற்றுமொரு பதிவு புகைப்படத்துடன் வெளியானது. பணம் கொடுப்பதும் கொடுக்காததும் அவரவர் விருப்பம். ஒரு வேளை அவர் சம்பாதித்த சொத்து மொத்தத்தையும் தன் வாரிசுக்கள் வீண் விரயம் செய்திருக்கலாம். மேலும் படத்தில் நடிப்பதில் கிடைக்கும் ஆதாயத்தில் இத்தனை சதவிகிதம் நான் என் ரசிகர்களின் நலனுக்காகச் செலவு செய்கிறேன் என்று எந்தவொரு ஒப்பந்தத்திலோ இவர் கையெழுத்திடவும் இல்லைதான். ஆனால், உடலுக்கு முடியாமல் உயிருக்குப் போராடிய நிலையில் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற வேளைகளில் இந்த தமிழ் மக்கள்தானே மனமுருகப் பிரார்த்தனை செய்தார்கள். அந்த நன்றிக்கடனுக்காக நலம் விசாரிக்கக்கூடவா முடியாமல் போயிற்று? தமிழகத்திலேயே அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட நடிகரால் தனது ரசிகர்களை வெள்ளத்தில் சிக்கி ஆறாத்துயரங்களுக்கு உள்ளான மக்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்யச் சொல்லி ஒரு சிறு வேண்டுகோள் விடுக்க முடியவில்லையா? தலைவனின் குரலைக் கேட்டு ரசிகர் பட்டாளங்கள் புயலெனக் கிளம்பியிருக்காதா? மழை ஓய்ந்து, ஊரைச் சுத்தம் செய்யும் பணியில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய வேளையில் இந்த மௌனம் தொடர்வது எதனை உணர்த்துகிறது? ஒருவேளை போயஸ் தோட்டத்துக்கு இந்த மழை செய்திகள் சென்று சேர்வதில்லையோ? இல்லை மனிதாபிமானம் அங்கே தடை செய்யப்பட்டு விட்டதோ? எது ஆனால் என்ன, அப்பாவி ரசிகர்கள் இன்று ஊரெங்கும் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்குத் தங்கள் தலைவன் மேல் அளவு கடந்த பாசம். அதில் நூற்றிலொரு பங்குகூட அவருக்கு இல்லாமல் போனதுதான் பெருஞ்சோகம். பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழிய உங்கள் தமிழ்ப்பற்று. 

1 comment:

  1. அது என்னவோ தெரியவில்லை. மக்கள் நடிகர்களை பேறு ஒரு தராசில் எதை போடுகிறார்கள்

    ReplyDelete