Sunday, April 3, 2016

தாம்பரம் டு பீச் - 16

பதினாறு      -    பூங்கா

08 : 50

பொதுவாக எழும்பூரில் இறங்கி தாம்பரம் நோக்கிச் செல்லும் வண்டியில் ஏறி விடும் நசீர் வாப்பா இன்று இறங்கவில்லை. அவருக்கு கிச்சாவை விட்டுவிட்டு இறங்க மனசு வரவில்லை.

கிச்சா அமைதியா உட்கார்ந்திருந்தார். கீழே தள்ளப்பட்டதில் நிலைகுலைந்துபோயிருந்தார். வழக்கமாய்ப் பாடிக் கொண்டிருப்பவர் இன்று வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையாக இருந்தார்.

      ‘என்ன கிச்சாண்ணே, மனசு ஒடஞ்சு போய்ட்டீங்க?’

நிலைமையைச் சகஜமாக்க எண்ணி நசீர் வாப்பா கேள்வி கேட்டார்.

‘இல்ல பாய், கீழ விழுந்ததில கொஞ்சம் அதிர்ச்சியானது உண்மைதான். ஆனா, அடுத்தவன் பொருளைக் காபந்து பண்ணுறதுல இருந்த வேகமும், அது கெடைக்கல்லன்னோன்னே அதுக்குத் தடையா இருக்கவங்கள தாக்குற வெறி எல்லாம் என் சுபாவத்துக்குப் புதுசாயிருக்கு. அதப்பத்தித்தான் யோசன பண்ணிட்டு இருந்தேன்’

‘என்ன பண்றது அண்ணே, இப்பத்தைய சமுதாயம் சுயநலமாத்தான் வளருது, சிந்திக்குது. அவன் கத்திய எடுத்து குத்தப் போனோன்னே எனக்கு மனசு ஒரு நிமிஷம் அப்படியே ஸ்தம்பிச்சுருச்சு. நல்ல வேளை மத்தத் தம்பி ஒரு உதை விட்டதுல கை தவறிப் போச்சு’

‘நமக்குக் கெடைக்க வேண்டியது எதுவோ அது கண்டிப்பாக் கெடைக்கும். நமக்குக் கெடைக்கக் கூடாதது எதுவோ அது கடைசிவரை கெடைக்காது. இது ஒரு படத்துல சூப்பர் ஸ்டார் சொல்லுவாரு’

‘உண்மைதான். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட்டா அது அழிவுலதான் கொண்டு போய் விடும்’

இவையனைத்தும் மேரியின் காதில் மிகத் தெளிவாக விழுந்தன. அந்தோனியாரைப் பற்றிய சிந்தனையுடன் இருந்தவள் இந்த வார்த்தைகளை உள்வாங்கினாள். பணம் இருந்தால் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தீரும். ஆனால் அளவுக்கதிகமான பணம் நிம்மதியைக் குலைக்கும். அதிலும் அடுத்தவன் பணத்துக்கு ஆசைபட்டால் அது கண்டிப்பாக கேடு விளைவிக்காமல் விடாது. இதில் அவள் மனம் உறுதியாக இருந்தது.

எட்வர்ட் சிந்துஜா மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். காதல் வயப்பட்ட இருவர் எப்படியிருப்பார்களோ அவ்வாறு இருந்தது அவர்கள் நிலை. பேச்சு குறைந்து போய், பார்வையாலேயே பேசிக் கொண்டார்கள்.

எட்வர்ட் மனதில் இவ்வளவு நாட்களும் இவளுடன் விடு பட்டுப் போன பொழுதுகளை எப்படியெல்லாம் ஈடு கட்டலாமென்ற யோசனை ஓடியது.

சிந்துஜா மனதிலோ இவனைத் தன் வீட்டில் அறிமுகப் படுத்தி அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி எழுந்தது.

ரயில் வேகம் குறைந்து மேடையில் நின்றது.

இருவரும் இறங்கினார்கள்.

கூடவே நசீர் வாப்பாவும் கிச்சாவும்.


(தொடரும்)


2 comments: