Thursday, April 7, 2016

தாம்பரம் டு பீச் - 18

பதினெட்டு    -    கடற்கரை

09 : 01

மேரி காலியாகிப் போயிருந்த பெட்டியைப் பார்த்தாள். ஆங்காங்கே சிலர் தென்பட்டார்கள். எல்லோருமே வேலைக்குப் போகும் அவசரத்தில் இருப்பது தெரிந்தது. அடிக்கடி கைகடிகாரத்தைப் பார்த்துக் கொண்டும், கைபேசியில் பேசிக் கொண்டும் அமர்ந்திருந்தார்கள்.
மேரி ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள். ரயிலின் வேகத்துக்குக் காட்சிகள் ஓடின. சிறு வயதில் முதன்முதலாக ரயிலில் செல்லும்போது அதைக் கண்டு தான் வீரிட்டு அழுததை எண்ணிப் பார்த்தாள். சிரிப்பு வந்தது.
தன் எதிர் இருக்கையின் கீழே தற்செயலாகப் பார்வை போனது.
ஒரு பொட்டலம் தென்பட்டது.
என்னவாயிருக்கும் என்ற ஆர்வம் மேலிட, சற்றே குனிந்து அதனை எடுத்தாள்.
பிரபல இனிப்பகத்தின் பெயர் அச்சிடப்பட்ட பை. உள்ளே என்னவோ இனிப்பு இருப்பதுபோல இருந்தது. என்னதானென்று பார்ப்போமே என்ற ஆவல் மேலிட அந்தப் பையைப் பிரித்தாள்.
அதிர்ந்தாள்.
உள்ளே கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள். எல்லாமே 500 ரூபாய் தாள்கள்.
இவ்வளவு பணத்தைப் பார்த்தறிந்திராத மேரிக்கு தலை சுற்றியது.
பிரமை பிடித்தவள்போல சில நேரம் இருந்தாள்.
ரயில் தன் போக்கிலே இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
தன் கஷ்டங்களுக்கெல்லாம் ஆண்டவனாகப் பார்த்து அனுப்பி வைத்திருப்பாரோ என்ற எண்ணம் தோன்றியது. கஷ்டத்தில் தத்தளிக்கும் தனது குடும்பத்தை நினைத்தாள். இந்தப் பணம் அவர்கள் கஷ்டத்தைக் குறைக்கும். அத்துடன் இது திருட்டல்ல. அடுத்தவர்களை ஏமாற்றி அடைந்ததல்ல. முக்கியமாக யாரும் தன்னைப் பார்க்கவில்லை.
உடனே தலையை உலுக்கிக் கொண்டாள்.
இது ஏதோ தப்பான பணம் என்று உள்ளுணர்வு சொல்லியது. இதுவரை நடந்து முடிந்திருந்த சம்பவங்கள் கண் முன்னே வந்து போயின. முக்கியமாக அந்த இரண்டு முதியவர்களின் பேச்சு திரும்பத் திரும்ப மனதில் எதிரொலித்தது. தான் இந்தப் பணத்தை எடுத்தால் தனக்கும் தன் குடும்பத்துக்கும் நிச்சயமாக ஏதோ கேடு விளையும் என்று மனம் சொல்லியது.
கண் மூடி அந்தோனியாரை நினைத்தாள். பிரார்த்தனையில் ஐக்கியமானாள்.
கண் திறந்தாள்.
வண்டி வேகம் குறைந்து ரயில் நிலையத்தின் வருகையை உணர்த்தியது.
மேரி எழுந்தாள்.
வண்டி நின்றது.
இரண்டடி எடுத்து வைத்தாள்.
ஏதோ நினைத்துக் கொண்டவள்போல மீண்டும் தனது இருக்கையருகே வந்தாள்.
குனிந்து அந்தப் பையை எடுத்தாள்.
மெதுவாக வண்டியை விட்டு இறங்கினாள்.
நடந்தாள்.
அவள் கண்கள் எதையோ மிகவும் ஆர்வமாகவும், அவசரமாகவும் தேடின.
திடீரென்று பிரகாசமாயின.
வேகமாக நடந்து சென்று அந்தப் பையை அந்தத் திசை நோக்கி வீசியெறிந்தாள்.
மனசு முழுக்க மகிழ்ச்சியுடன் அந்தோனியாரைத் தரிசிக்கக் கிளம்பினாள்.
உலகச் சரித்திரத்தில் முதல் முறையாகப் பணம் எனும் அரிய வஸ்து குப்பைத்தொட்டியைக் கண்டது. நொந்தது.


(முற்றும்)

2 comments:

  1. நம்பமுடியவில்லை. அந்தப்பணத்தை உரிய இடத்த்கில் சேர்ப்பித்து இருக்க வேண்டும் அல்லவா குப்பைத் தொட்டியைக் கண்ட பணம் யார் கையிலாவது அகப்படும்தானே

    ReplyDelete
  2. அவளைப் பொறுத்தவரையில் அது வேண்டாத பணம், அவ்வளவே.

    ReplyDelete