Tuesday, April 5, 2016

தாம்பரம் டு பீச் - 17

பதினேழு      -     கோட்டை

08 : 53 

திராவிடன் முகத்தில் ரத்தம் உறைந்திருந்தது. கைக்குட்டையை வைத்து அழுத்தியதால் ரத்தப் போக்கு நின்றிருக்க வேண்டும். அசூசைப்பட்டு அழுத்தித் துடைத்திருந்தால் இன்னும் ஆழமான காயம் ஏற்பட்டிருக்கலாம். நல்ல வேளை அப்படி அவர் அழுத்தித் துடைக்கவில்லை. இருந்தாலும் பிளேடின் கூர்மை ரத்தப் போக்கை உண்டு பண்ணியிருந்தது.

திருடர்களின் பலமே அடுத்தவரின் சஞ்சலம். தன் உடமையை அடுத்தவன் காபந்து பண்ணுவதை உணர்ந்து திடுக்கிடும் தருணங்கள் திருடனை அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி நகர வைக்கும். பொதுவாக இருவர் அல்லது மூவர் சேர்ந்தே தொழிலை அரங்கேற்றுவர். சம்பவத்தை ஒருவன் உணர்ந்து குரல் எழுப்பும் வேளையில் அனேகமாகப் பொருள் கை மாறிப் போயிருக்கும். சந்தேகத்துடன் அருகில் இருப்பவனைப் பிடித்துச் சோதனை செய்வது எந்தப் பயனையும் தராது. மாறாக அவனிடமிருந்து பழி சொல்லையும், அருகிலிருப்பவர்களின் ‘ஐயோ, பாவம்’ கோஷங்களையுமே பெற்றுத் தரும். அனேகமாக அடுத்த நிறுத்தத்தில் அந்தத் திருடன் இறங்கித் தன் சகாக்களுடன் கை கோர்த்து, அடுத்த இரையைத் தேடிச் சென்று விடுவான்.

ஆனால், இன்றைய சம்பவம் தனியொருவனால் மேற்கொள்ளப்பட்டது. காரணம் அவன் தாக்கப்பட்ட வேளையிலோ, பொருளைக் காபந்து பண்ணிக் கொண்டு செல்லும் பொழுதிலோ யாரும் அவனுக்குக் கை கொடுத்து உதவ வரவில்லை. ரத்தத்தைக் கண்டு பீதியடைந்திருக்கக் கூடிய நொடிகளைத் திருடன் மிகவும் நம்பினான். அந்த நிமிடங்களைத் தான் தப்பிக்கப் பயன்படுத்த முயன்றான். திராவிடன் எனும் ராணுவ வீரரின் சமயோசிதமும், அன்வர், எட்வர்ட் ஆகியோரின் துணிச்சலும் அதைத் தடுத்து விட்டது.

ராணுவத்தில் தமக்கு அளிக்கப் பட்டிருந்த பயிற்சியை எண்ணிப் பெருமிதம் கொண்டார்.
தொடர்ந்து அன்றைய நாளில் செய்ய வேண்டியிருந்த பணிகளை மனம் அசை போட்டது. மேலதிகாரியைக் கண்டு பேச வேண்டிய விடயங்களைத் தனது கைபேசித் திரையில் இன்னொரு முறை பார்த்துக் கொண்டார்.

ரயில்ப்பெட்டிகளில் இப்பொழுது ஜனநடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது.

மேரி ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள்.

தனது பிள்ளைகள் பற்றிய சிந்தனைகள் எழுந்தன.

பெரியவன் படிக்கும் பள்ளியின் ஃபாதர் இவளைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்தன.

    ‘நல்லாப் படிக்கிறான் உன் புள்ள. கவனம் கலையாமப் பார்த்துக்கோ. ரொம்ப நல்லா      வருவான்’

இதைக் கேட்க மனசுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருந்துச்சு. எபனேசர் வீட்டுக்கு வந்தோன்னே அவனிடம் இது பற்றிச் சொல்லிச் சிலாகித்தாள்.

    ‘நமக்கு செல்வத்தக்குடுக்காட்டியும் நம்ம புள்ளைக்கு நல்ல படிப்பக் குடுத்திருக்காரு      ஆண்டவன்’

மற்றவன் அவனை விட ரெண்டு வயசு சின்னவன். அம்மா செல்லம். இன்னும் இவளையே சுத்தி, சுத்தி வருவான். எப்ப பாரு வெளையாட்டுதான். அண்ணன் மாதிரி நல்லாப் படிக்கணும்னு சொல்லுவா.

    ‘போம்மா, எப்ப பார்த்தாலும் படிக்கச் சொல்லியே உயிரெடுக்காத’

மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

வண்டி நின்றது.

திராவிடன் இறங்கினார்.



(தொடரும்)

3 comments:

  1. தொடர்கிறேன் சம்பவக் கோர்வைகள் சிலாகிக்க வைக்கிறது

    ReplyDelete
  2. இப்போதான் பார்த்தேன்... தொடர்கதை போயிட்டு இருக்கா... முழுசும் படிச்சிட்டு சொல்றேன்.. பேர் எல்லாம் மாத்திட்டீங்க போல #மகிழ்ச்சி ;)

    ReplyDelete