Saturday, April 2, 2016

தாம்பரம் டு பீச் - 15

பதினைந்து    -    எழும்பூர்

08 : 47

நியாஸ் கண்ணில் ரயில் தென்பட்டது. என்றைக்குமில்லாது இன்று போலீஸ் நடமாட்டம் கொஞ்சம் அதிகமாக இருப்பதை உணர்ந்தான்.

ராஜாபாதருக்குச் சொன்னதுபோல புத்தகக் கடையின் அருகில் போய் நின்றான்.

ரயில் நின்றது. குப்பையாக மக்கள் வந்து வெளியே விழுந்தார்கள். அதே அளவில் ஏறி உள்ளே போய் விழுந்தார்கள்.

அலுவலக நிறுத்தத்தில் அன்வர் மெதுவாக இறங்கினான்.

பொதியைச் சுமந்து கொண்டு ராஜாபாதரும் பிளாட்பாரத்தில் அடிவைத்தான். அவன் கண்கள் நியாஸைத் தேடின.

சொன்னது போலவே அந்தப் பிரபலமான புத்தகக் கடை வாசலில் அவன் தென்பட்டான்.

திடீரென்று அவனைப் போலீஸ் நாய் ஜெல்டா வழி மறித்தது.

பயந்தே போனான்.

அதன் கூடவிருந்த அதிகாரி அவனிடம் பையில் என்ன என்று கேட்டான். இவனுக்குப் பீதியில் வாய் வரண்டு போய் வார்தைகள் உளரல்களாக வெளியேறின.

இவன் ஒரங்கட்டப்பட்டான். பை ஒரு ஓரத்தில் வைத்து ஜெல்டாவால் முகரப்பட்டது. முகர்ந்து முடித்த அது கால்களால் எதையோ பற்றியிழுத்தது.

ஸ்பீக்கர் என்று கூறப்பட்டிருந்த, இவனும் நம்பியிருந்த அந்தக் கருவியின் உள்ளேயிருந்து சின்னச்சின்ன பிளாஸ்டிக் உறைகள் வெளிப்பட்டன. அதில் ஒன்றை எடுத்துப் பிரித்துப் பார்த்தான் வேறொரு அதிகாரி. லேசாக முகர்ந்து அருகில் நின்ற சகாவிடம் தலையை ஆட்டி என்னமோ சொன்னான்.

ராஜாபதரிடம் அந்த அதிகாரி நெருங்கி

‘ஆன்டி நார்கோட்டிக்ஸ் ஆக்ட்ல உன்னைக் கைது செய்கிறோம். எங்ககூட ஸ்டேஷனுக்கு வந்து எல்லாத்தையும் சொல்லிட்டா உனக்கு நல்லது’

ராஜாபாதருக்குத் தலை சுற்றியது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. திடீரென்று நியாஸ் ஞாபகம் வந்தது.

‘சார் எனக்கொண்ணும் தெரியாது சார். அவன்தான் சார் இத எங்கிட்ட கொடுத்து பத்திரப்படுத்தச்சொன்னான்.’

அவன் கை காட்டிய திசையில் பலர் நின்றிருந்தார்கள். ஆனால் நியாஸ் எங்கோ மாயமாய் மறைந்திருந்தான்.

‘சார், அங்கதான் நின்னுக்கிட்டு இருந்தான் சார். வேணா நான் ஃபோன் போட்டு அவங்கிட்ட பேசுறேன்’

அவசரமாகத் தனது ஃபோனை எடுத்து நியாஸை அழைக்க விழைந்தான்.

      ‘நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்சமயம் பாவனையில் இல்லை’

மெதுவாகக் காவலர்களால் வெளியே அழைத்துச் செல்லப் பட்டான்.

அதனை அடுத்த பிளாட்பாரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த நியாஸ் வேறு ஒரு ஃபோனில் யாரிடமோ சொல்லத் தொடங்கினான்.

ரயில் கிளம்பியிருந்தது.



(தொடரும்)

1 comment:

  1. இந்த மாதிரியான சிலரால்தான் போலீஸ் தன்பணியை முடிக்க முடிகிறது

    ReplyDelete