Thursday, March 31, 2016

தாம்பரம் டு பீச் - 14

பதினான்கு    -    சேத்துப்பட்டு

08 : 43

கூட்டம் அலைமோதி இறங்கியது. மீண்டும் வேறு முகங்கள் உள்ளே ஏறின. இடங்களைப் பிடிப்பதில் அக்கறை காட்டின. தத்தமது வேலைகளில் மூழ்கின.

சிந்துஜா எட்வர்ட் அருகில் சென்றாள். அவன் இவளைக் கண்டு புன்னகைத்தான்.

      ‘எப்படி இருக்க சிந்து?’

      ‘நல்லா இருக்கேன், நீ?’

      ‘அதுதான் பார்த்தியே, இன்னும் கொஞ்ச நேரத்துல பரலோகம் போயிருப்பேன்’

அப்படிச் சொன்னது அவளுக்குப் பிடிக்காமல் போகவே இரண்டு கைகளாலும் தனது வாயை பொத்தி, தலையை ஆட்டி அப்படிச் சொல்ல வேண்டாமென்று அவனைப் பணித்தாள்.

அவன் அவள் கைகளைப் பிடித்து மெதுவாக கீழே இறக்கி விட்டான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதன் பின்னர் அவர்களிருவருக்கும் தங்களைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதே மறந்து போனது.

மேரி இப்படி ஒரு சம்பவத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. திடீர்னு இப்படி நடக்க என்ன காரணம் என்று யோசித்தாள். நல்ல நேரம் அந்தப் பையனுக்கு ஒண்ணும் ஆகல்ல. அதுக்கு மானசீகமாக இறைவனிடம் நன்றி கூறினாள். அடுத்தவங்க பொருள்மேல ஆசைப் படுவது எந்த விதத்தில நியாயம்னு அவளுக்குத் தெரியல்ல. அதிலயும் திருடறது பெரிய பாவம். கொலைசெய்வது அதைவிடப் பாவம். மனம் முழுக்க அந்தத் திருடனுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கச் சொல்லி பிரார்த்தனையில் ஈடுபட்டது.

திராவிடன் சற்று நிலைகுலைந்து போயிருந்தார். இருப்பினும் ராணுவப் பயிற்சி அவரை சகஜமாக இருக்க வைத்தது. முகத்தில் ரத்தப்போக்கை நிறுத்தக் கைக்குட்டையை வைத்து அழுத்தியிருந்தார்.

அன்வருக்கு களைப்பாக இருந்தது. கைகலப்பில் ஈடுபட்டதனால் சட்டையும், பேன்டும் கசங்கிப் போயிருந்தன. இந்தக் கோலத்தில் எப்படி அலுவலகம் போவது என்று யோசித்தான்.

ராஜாபாதருக்கு ஃபோன் வந்தது. அதை எடுத்துப் பார்க்கவே பயந்துபோயிருந்தான். அருகில் இருந்தவர் இவனை உலுக்கியவுடன்தான் சுதாகரித்துப் பேசினான்.

      ‘வந்திட்டிருக்கேன்’

      “----------“

      ‘இப்ப வந்திரும், நீ ரெடியா இரு’

      ‘-----------‘

மறுமுனையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

வெறுப்பாக இருந்தது. ஏதோ வேண்டாத வேலையில் தான் மாட்டிக்கொண்டதாக மனசு கெடந்து அடித்துக் கொண்டது. ஒரு தம் பிடித்தால் தேவலாமென்று தோன்றியது. எழுந்து போக முடியாதபடி பொதி தடுத்தது. தன்னைத்தானே சபித்து கொண்டான்.

காத்திருந்தான்.



(தொடரும்)

1 comment:

  1. சில நிகழ்வுகளைப்பார்த்த பின்தான் தான் ஈடுபட்டிருக்கும் செயல்மேல் கோபம் வருகிறதோ என்னவோ

    ReplyDelete