Tuesday, December 10, 2013

வாழ்வின் விளிம்பில் - நூலாய்வு

16 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. நூலாசிரியர் எனது நண்பன் பிரசாத்தின் தந்தை என்பது சிறப்பு. இவரின் ஆக்கங்கள் வலைப்பதிவுகளில் எனக்கு முன்னரே நன்கு பரிச்சயம்.

சுஜாதா,பாலகுமாரன் என மிகச்சில பிரபலங்களின் எழுத்துகளையே விரும்பிப் படித்தது ஒரு காலம். பின்னர் அந்தப் பட்டியலில் கி.ராஜநாராயணன் அய்யாவும், எஸ்.ராமகிருஷ்ணனும் இடம் பிடித்தார்கள். இவை தவிர விகடன்,குமுதத்தில் வரும் சிறு மற்றும் நெடுங்கதைகளையும் விடாமல் படிக்கும் வழக்கம் இருந்தது. இணையம் வந்தபிறகு படிக்க நிறைய விடயங்கள் கிடைக்கின்றன ; சில ஆச்சர்யப்பட வைத்தாலும் பல முகம் சுழிக்க வைக்கின்றன. ஆனால் நூலாசிரியரின் வலைப்பக்கம் எப்பொழுதும் சுவாரஸ்யமாக இருக்கும். தனது பழுத்த அனுபவங்களைப் படிப்பவரின் மனதுக்குப் பிடித்தவாறு எழுதுவதில் வல்லவர். ஏறக்குறைய 70 களின் எழுத்துச்சாயல் அவர் நடையில் இருக்கும். இந்த நூலிலுள்ள சில கதைகள் (அவை உண்மையில் அனுபவக்கோர்வைகள்) ஏற்கனவே வலைப்பதிவு செய்யப்பட்டவை. ஒவ்வொன்றாக அவற்றைப் பார்ப்போம் :

1. வாழ்வின் விளிம்பில் மற்றும் 14. விளிம்புகளில் தொடரும் கதை 
இந்தக்கதையின் நாயகன் ரங்கசாமிக்கு உடல்நலம் மிகவும் மோசமாகும்போது அவனுடைய மனவோட்டத்தை பிரதிபலிக்கிறது கதை. இறுதியில் அவனும் மனைவியும், ஈருடல் ஓருயிரென்று வாழ்ந்து, ஒன்றாக இறப்பதாக முடிகிறது கதை. இந்த எண்ண ஓட்டங்கள் (முடிவு தவிர்த்து) ஆசிரியரின் வாழ்வில் நடந்திருக்குமோவென நம்மைச் சிந்திக்க வைப்பது என்னமோ உண்மை. 

2. கேள்விகளே பதிலாய் 
குழந்தையின்மை ஒரு இளம் தம்பதியின் நிம்மதியை எப்படிக்குலைக்கின்றதென்பதையும் அதற்காக அவர்கள் தவறாக போலிச்சாமியாரிணியின் பின்னால் போவதையும் நன்கு விளக்குகிறது. இறுதியில் அந்நாளைய பாலச்சந்தர் படங்கள்போலக் கேள்வியுடன் முடிகிறது கதை. 

3. ஏறி வந்த ஏணி
இந்த உலகில் எல்லோருமே சுயநலமிகளாக இருப்பதை இந்த அனுபவப் பதிவு தெரிவிக்கிறது. பாவம்சேகரன்,கடைசியில் சோகரனாகி விட்டார். அவர் மனைவி நாய்க்குச் சோறூட்டுவதை நிறுத்தவில்லை என்பது காமெடி பன்ச்.

4. மனசாட்சி
மேல்மட்ட மக்களின் வாழ்வில் நடப்பதாக் கூறப்படும் இக்கதை ( இப்படிக்கூட நடக்குமா என பிரமிக்க வைத்து) இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதன் மகிமையை உணர்த்துகிறது. 

5. அனுபவி ராஜா அனுபவி
சதாவின் பாத்திரப் படைப்பு ( உண்மையாயிருக்குமோ?) பழைய படமொன்றில் என்னத்தே கன்னையாவை நினைவு படுத்தியது. நாய் தானும் தின்னாது, தின்னுற மாட்டையும் விடாது என்பது இதற்குச் சாலப்பொருத்தம்.

6.வாழ்க்கை ஒரு சக்கரம் 
தலைப்புக்கேற்ற ஒரு கதை, (புது) மனைவி அருகில் வேற்றாள் அமர்வதில் வரும் கோபம் இயல்பாக இருக்கிறது.(நான் ஆண் என்பதால் அப்படித்தோறுகிறதோ என்னமோ?) இதன் சாயல் மீண்டும்  (15) 'கண்டவனெல்லாம்' கதையில் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.  அடுத்தவர் நிலை உயர்வதைப் பொறுக்காத சித்தியின் விசும்பல் யதார்த்தம். 

7.இப்படியும் ஒரு கதை
இந்தத் தொகுப்பில் சிறந்தது இதுதான். மலையாள மைந்தரின் வாழ்க்கை முறை விவரமாகக் கூறப்படுகிறது. (தமிழ்நாட்டிலும் இப்படியான பழக்க வழக்கங்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு) முடிவு புல்லரிக்க வைத்ததென்னமோ உண்மை.

8. எங்கே ஒரு தவறு?
ஜயந்தியின் கதையில் அவள் மேல் பச்சாதாபம் தோன்றுகிறது. அவள் (உடல்) இச்சைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடிப்போன கணவன் குற்றவாளியா, அல்லது அவளுடன் சல்லாபித்து அவளை மற்றவரின் கோபத்துக்கு ஆளாக்கிய சிவகுமாரன் குற்றவாளியா? மணவாழ்க்கையில் ஒவ்வாமையைக் கண்டறிந்து, பின் மணமுடிக்க  இதுவொன்றும் மேற்குலகமில்லையே.

9. விபரீத உறவுகள்
ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றிய கதை, அனேகமாக இப்பொழுது தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' சாயலில் பயணிக்கிறது. முகத்தைப் பார்த்து ஏமாறாதே என எச்சரிக்கை விடுக்கிறது. கடைசியில் வைத்தியர் எஸ் ஆவது பன்ச்.

10. சௌத்வி கா சாந்த் ஹோ
மூட நம்பிக்கைகளை விவரிக்கும் கதை, குருவி உட்காரப் பழம் விழுந்த கதையாய் முடிகிறது. (தலைப்புக்கு அர்த்தம் என்ன?)

11.லட்சுமி கல்யாண வைபோகம்
இதுவும் அனுபவப்பகிர்வு போலும். பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்று மணப்பெண்ணுக்கு ஆதரவாக வாதாடிய நல்லுள்ளங்களை நினைக்கையில் பெருமையாக உள்ளது.

12. அரண்டவன் கண்ணுக்கு 
இந்தத்தொகுப்பில் இது தேவைதானா? 

13. பார்வையும் மௌனமும்
மற்றொரு சிறந்த படைப்பு. பால்ய விவாகத்தால் விதவையான சிறுமியரின் வாழ்க்கை மிகக் கொடியது. இது அதைவிடக் கொடுமை. காமு பாவம், உணர்ச்சிப்பெருக்கை அவள் எப்படித் தடுப்பாள்? மனசை ரொம்பவே சங்கடப்படுத்திய படைப்பு இது.

14. நதிமூலம் ரிஷிமூலம்
இதுவும் முதல் மூன்றில் வரும் படைப்பு. காதலுக்குக் கண் மட்டுமில்லை, அறிவும் கிடையாதென்பதை வலியுறுத்தும் கதை. பிறப்பின் சஸ்பென்ஸ் உடைபடும் இடம் (மனதளவில்)கை தட்ட வைத்தது.

மொத்தத்தில் முதல் நூல் நன்றாகவே உள்ளது. கலைப்பணி தொடர வாழ்த்துக்கள்.

1 comment: