Thursday, December 19, 2013

யதார்த்தம்


நேற்று கத்தார் தேசியதினம். லீவு விட்டுட்டாங்க. எப்பவும்போல நண்பன் ஸ்ரீகாந்தன் அறைக்கு ராஜேந்திரனுடன் போனேன். அங்கு சோமபானம் பருகி. மதிய உணவை முடித்து விட்டுக் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். மாலை 5 : 15 மணிக்காட்சிக்கு ஆனந்த மற்றும் ஜோன்ஸ் அழைப்பு விடுத்துப் போயிருந்தார்கள். படம் 'எங்கேயும் எப்போதும்' இயக்குனரின் அடுத்த படைப்பு என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புடன்தான் போனோம். வழக்கமாக முதல் படத்தில் காட்டும் அக்கறை,உழைப்பு எதையுமே அடுத்த படத்தில் காட்டுவதில்லை தமிழ் இயக்குனர்கள். சிற்சில விதிவிலக்குகள் இருந்தாலும், அனேகமானவர்கள் படங்களில் ஒருவித சலிப்புத் தெரியும். இந்தப் படம் பார்க்கலாம் ரகம். ஏனோ ஹீரோ மனதில் ஒட்டவில்லை. என்னதான் நடிகர் திலகத்தின் பேரனென்றாலும் தமிழ் நாயகர்களுக்கான முகவெட்டு இவரிடம் இல்லவேயில்லை. அது எப்படியோ போகட்டும். இந்தப் பதிவும் ஒரு சினிமா விமர்சனம் அல்ல. அதையும் தாண்டி ஒரு தனி மனிதனின் உண்மை நிலை பற்றிய விளக்கம் மட்டுமே.

படத்தில் ஒரு காட்சியில் நாயகனும்,நாயகியும் ஒரு ஆட்டோவில் பயணிப்பார்கள். அந்த ஆட்டோக்காரர் சில வசனங்கள் பேசுவார். கூர்ந்து நோக்கினால் அவர் முகம் ரொம்பவும் பரிச்சயமாகப் பட்டது. ஸ்ரீகாந்தனும் அதை ஆமோதிக்க, பார்த்தால் அது எங்களுடன் பொறியியல் கல்லூரியில் கல்வி பயின்ற நண்பன் இளங்கோ ! அனேகமானோர் இவன் படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அல்லவா சொல்லியிருந்தார்கள் ? 25 வருடங்கள் அந்த மாயச் சூழலில் சிக்கி அவன் அடைந்திருந்த 'இடம்' சில நிமிடங்களே திரையில் இடம்பெற்றதென்றால், இந்த நிலையடைய எவ்வளவு பாடு பட்டிருக்க வேண்டும். வேறு எந்தத் துறையில் இருந்திருந்தாலும் ஒரு நல்ல (?) நிலைக்கு வந்திருக்க முடியும். ஏனிப்படி? அதீத திறமை இருந்தும் அதிர்ஷ்டக் காற்று தம் பக்கம் வீசாமையால் கடைசிவரை திரைமறைவிலேயே வாழ்ந்து, வீழ்ந்த எண்ணிலடங்காரைப் பற்றிப் படித்தும், பேசியும் இருக்கிறோம். ஆனால், எம்மில் ஒருவனின் நிலை மனதைத் தைத்ததென்னவோ உண்மை. 

அதன்பின் வந்த காட்சிகளிலெல்லாம் துணை நடிகர்களின் முகங்களை மட்டுமே, என்னை அறியாமல், கண்கள் கூர்ந்து நோக்கின. எத்தனை கனவுகளும், ஏக்கங்களும் அந்தக் கண்களில் தேங்கி நின்றன. அவற்றிலெல்லாம் என்பன் நண்பன் தெரிந்தான் என்பதே உண்மை.

2 comments:

  1. எங்கெங்கு நோக்கினும் நண்பன் முகம் என்று நினைத்தீர்களா.?சினிமா மோகம் பலரது பயணப் பாதையையே மாற்றி இருக்கிறது என்பதுதான் யதார்த்தம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உங்கள் கருத்து மிகச்சரி. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றீ.

    ReplyDelete