Saturday, December 21, 2013

நினைவலைகள்


அப்பொழுது எனக்கு 5 வயதிருக்கும். காலை 6 : 30 மணிக்கு 'நெஞ்சில் நிறைந்தவை' கேட்டுக்கொண்டே படுத்திருப்பேன். 'கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும், வஞ்சகரின் உள்ளம் வலை விரிக்கும்' எனும் பாடல் அடிக்கடி ரேடியோ சிலோனில் ஒலிபரப்பாகும். அக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.  இதைத் தொடர்ந்து 7 மணிக்கு 'பொங்கும் பூம்புனல்' ஒலிக்கும். அதில் புதிய பாடல்கள் இடம்பெறும்.  அதைத் தொகுத்தளிக்கும் அறிவிப்பாளர்கள் கவித்துவமான இரு வரிகளை ஒவ்வொரு பாடலுக்கும் முன்னர் சொல்வது தனி அழகு. மதியம் 12 : 05 க்கு 'சித்திரகானம்' ஒலிக்கும். செய்திகளின் பின்னர் 'இந்திப்பாடல்கள்' ஒலிக்கும். மொழி புரியாவிட்டாலும் முகமது ராஃபி முதல் மூகேஷ், கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே என பல வடநாட்டுப் பாடகர்கள் அறிமுகமானது இவ்வண்ணமே. பின்னர் 'ஒரு படப்பாடல்' மற்றும் 'மலர்ந்த்தும் மலராதவை' தொடரும். 2 : 30 க்கு 'மகளிர் விருப்பமும்' அதைத் தொடர்ந்து 'பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி' ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் கணீர்க்குரலில் ஒலித்ததும் இன்றும் இனிக்கிறது. 'மலையாளப் பாடல்கள்' மூலம் யேசுதாஸ், ஜெயச்சந்திரன் மற்றும் பல பெண் பாடகிகள் அறிமுகம். 5 மணிக்கு 'இன்றைய நேயர்' அதைத் தொடர்ந்து 'பிறந்தநாள் வாழ்த்து' என 5 : 30 க்கு 'நீங்கள் கேட்டவையுடன்' வர்த்தக நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். பிற்காலத்தில் இரவு ஒலிபரப்பு தொடங்கிய வேளைகளில் 'இரவின் மடியில்' தாலாட்டுப் பாடித் துயில வைக்கும். இதுபோக 'தேன்கிண்ணம்', கதம்பமாலை','மலர்ந்தும் மலராதவை' எனப் பல நிகழ்ச்சிகள், சிந்தனையைத் தூண்டும் அதேவேளை மனதை மயக்கும்.

விடுமுறை நாட்களை கே.எஸ்.ராஜா ஆக்கிரமிப்பார். 'திரைவிருந்து' மற்றும் 'இசையணித்தேர்வு' மிகவும் எதிர்பார்க்கப்படும்.'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் இடம்பெற்ற 'என்னடி மீனாட்சி' பாடல் பல வாரங்கள் நிலைத்து நின்றது மறக்க முடியாதது.  'ஒலிச்சித்திரம்' (திரைப் படங்களின் கதை,வசனம்) ஒருமணி நேரம் ஒலித்தாலும் சுவாரஸ்யம் குறையாது. பி.எச்.அப்துல் ஹமீத் 'பாட்டுக்குப் பாட்டு' மூலம் மனதுகளைக் கொள்ளை கொள்வார். 'புதுவெள்ளம்' புதிய பாடல்களை அறிமுகம் செய்யும். 'விடுமுறை விருப்பம்' நேயர் விரும்பிய பாடல்களை வாரி வழங்கும். இதற்கிடையில் நாடகங்கள் தமது ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும். ராமதாஸின் 'கோமாளிகள்' நாடகத்தைக் கேட்க ஒரு கூட்டமே இருந்தது. தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களில் சிறப்பு வாழ்த்து நிகழ்ச்சிகள் ஒலிக்கும். புது ராகங்களை இசைக்கும். அவற்றை ஒலிநாடாவில் பதிவு பண்ணப் பெரிய போட்டியே நடக்கும். 

இன்று போல் அன்று விளம்பரதாரர்கள் இடையில் இடியூறு செய்யாது இருந்த காலமது. அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளின் ஊடே பல விடயங்களைப் பகிர்ந்தார்கள். வெறும் அரட்டைக் கச்சேரியைக் கேட்டு சலிப்புறும் நிலை அன்றில்லை. வானொலி கேட்டல் ஒரு உபயோகமான பொழுது போக்காக இருந்த காலமது. அதற்கு இலங்கை வானொலி முன்னோடியாக இருந்ததென்பது பெருமைக்குரிய விடயம்.

2 comments:

  1. ஐந்து வயது நினைவுகள் அபாரம். நிகழ்ச்சி நிரலும் அதன் தலைப்புகளும் நேரம் தவறாமல் நினைவிலாடுவது ஆச்சரியம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எல்லா நினைவுகளும் 5 வயதிலுள்ளவை அல்ல, சில பிற்கால நிகழ்வுகள். வருகைக்கு நன்றி.

    ReplyDelete