08 : 30
தமிழ்நாடு
காவல்துறைசார் உத்தியோகத்தஸ்தர்கள் நால்வர் ரயிலில் ஏறினார்கள். அவர்கள் பெயர்கள் அவசியமில்லை.
அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணி மிகவும் முக்கியமானது. தலைமைக் காரியாலயத்திலிருந்து
அதி ரகசியமான தகவல் ஒன்று அவர்கள் சார்ந்த காவல்நிலையப் பொறுப்பதிகாரிக்கு வந்திருந்தது.
காலையில்
அவசரமான ஒரு கூட்டம் நடந்து முடிந்திருந்தது. சென்னை ரயில்களில் வெடிகுண்டு வைக்கும்
ஒரு சதித்திட்டம் பற்றி அலசி ஆராயப்பட்டது. உடனடியாக ஒவ்வொரு காவல்நிலையத்திலிருந்தும்
தனிப்படைகள் ரயில் மற்றும் ரயில் நிலையப் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டன. வெடிகுண்டைக்
கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் குழு இவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் என்று கூறப்பட்டது.
மிக முக்கியமாக இந்தத் தகவலைப் பொதுமக்களிடம் கசிய விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்
பட்டிருந்தார்கள்.
எந்த
ரயிலில், எந்தப் பெட்டியில் யாரால் என்ற மேலதிக விபரங்கள் கிடைக்கும் பொழுது பகிரப்படும்
எனும் உத்தரவாதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.
ரயில்
நிலையத்தில் இறக்கி விடப்பட்ட நால்வரும் ஒவ்வொரு பெட்டியில் ஏறிக்கொண்டார்கள். அவர்களுடன்
வந்த இன்னொரு குழு ரயில் நிலையப் பாதுகாப்பைப் பலப்படுத்த ஆயத்தமானது.
மாற்றுடை
தரித்திருந்த காரணத்தால் இவர்களை அடையாளம் காணுதல் சிரமமாய் இருந்தாலும், பரிச்சயப்பட்டவர்களுக்குச்
சட்டெனப் புரிந்தது.
ஒவ்வொரு
காவல்நிலையத்திலிருந்தும் இவ்வாறு காவலர்கள் எல்லா ரயில்களிலும் ரோந்து வருவதும், சந்தேகத்துக்கிடமானவர்களை
வளைத்துப் பிடிப்பதும் சுலபமான காரியமில்லை. ஒரு வேளை தகவல் தவறாய்க்கூட இருக்க வாய்ப்பிருந்தது.
ஆனால், அப்படி ஏதாவது துப்பு துலங்கினால் அதன்மூலம் பல உயிர்கள் காக்கப்படும் என்பது
மட்டும் உண்மை.
கூட்டமாக
இருந்த பெட்டிகளில் தம்மைப் பொருத்திக் கொண்டார்கள். உன்னிப்பாக சுற்றுமுற்றும் பார்த்துக்
கொண்டார்கள். தடயத்திற்காகக் காத்திருக்கலானார்கள்.
சந்தோஷ்
ஏறிய பெட்டியில் பல தரப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள். கண் தெரியாத ஒருவர் பழைய பாடல்களைப்
பாடிக் கொண்டிருந்தார். கைக்குட்டைகளை ஒருவர் வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தார். பெண்ணொருத்தி
ஜன்னலோரமாக அமர்ந்து தனது அலைபேசியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். சற்றே தள்ளி
நின்றிருந்த ஒருவன் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான். மிகவும் மிடுக்கான
தோற்றத்துடன் ஒருவன் அமர்ந்திருந்து சிந்தனை வயப்பட்டிருந்தான். கண்ணை மூடி ஜெபத்திலீடுபட்டிருந்தாள்
ஒரு மாது. இன்னொருவன் பெரிய மீசையுடன் அமர்ந்திருந்தான். கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலி
மின்னியது. ராணுவ வீரன் போன்ற ஒருவன் தன் அலைபேசியில் ஏதோ தகவல் தேடிக்கொண்டிருந்தான்.
ஒருத்தன் முன்னாள் தமிழக முதல்வரின் உருவம் பதித்த மோதிரம் அணிந்திருந்தான். இப்படி
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் காட்சியளித்தனர். இதில் எங்கே போய்த் துப்புத் துலக்குவதென்று
ஒரே மலைப்பாக இருந்தது.
சிந்தனை
வயப்பட்டிருந்தவரை வினோதமான ரிங்டோன் ஈர்த்தது.
‘ஹல்லோ’
‘----‘
‘இன்னும் கிட்டியில்லா. இவட கிண்டி’
‘----‘
‘யான் அறியும்’
‘----‘
‘ஞான் பின்னே விளிக்கும்’
சென்னையில்
தமிழ் தவிர மற்ற அனைத்து மொழிகளும் நன்கு பேசப் படுகின்றன என்று எண்ணிக் கொண்டார்.
அலைபேசி அழைப்பைத் துண்டித்த ஸ்ரீகுமார் தனது காலடியில் இருந்த பையைத் திறந்து பார்த்தான்.
அவ்வேளை உள்ளேயிருந்த பொட்டலங்கள் காவலர் சந்தோஷ் கண்ணுக்குத் தென்பட்டன.
அவர்
போலீஸ் மூளைக்கு ஏதோ ஒன்று சரியாய்ப் படவில்லை.
(தொடரும்)
No comments:
Post a Comment