Wednesday, March 30, 2016

தாம்பரம் டு பீச் - 13

பதின்மூன்று     -     நுங்கம்பாக்கம்

08 : 40


கீழே விழுந்திருந்த கிச்சாவைக் கைத்தாங்கலாக அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்து ஆசுவாசப் படுத்தி கொண்டிருந்தார் நசீர் வாப்பா.

பையை வாங்கி உள்ளே வைத்ததில் கை வலித்தது மேரிக்கு. அத்துடன் படபடப்பு வேறு. அந்தோனியாரை நினைத்து அப்படியே இருக்கையில் சாய்ந்து இளைப்பாறினாள்.

எட்வர்ட்டும் அன்வரும் அந்தப்பையை எடுத்து பத்திரப் படுத்தினார்கள்.

அப்பொழுதுதான் எட்வர்ட் ஒன்றைக் கவனித்தான்.

இதுவரையில் அவனைக் கொஞ்சமும் சட்டை செய்யாதிருந்த சிந்துஜா அவனை நேசப்பார்வை பார்த்தாள்.

இது போதாதா அவனுக்கு? மிகவும் உற்சாகத்துடன் இயங்க ஆரம்பித்தான்.

கன்னத்தில் பிளேட் கிழித்து ரத்தம் சொட்டியபடியிருந்த திராவிடனை அணுகி அவருக்கு முதலுதவி செய்தான். அப்படியே எட்டி மேரியிடம் நன்றி சொன்னான். பரபரவென்று நசீர் பாய் அருகில் சென்று கிச்சாவை சமாதானப்படுத்தினான்.

இது அனைத்தும் அந்தப் பெட்டியின் வேறொரு முனையிலிருந்து ஸ்தலத்துக்கு குணா வருமுன் மின்னல் வேகத்தில் நடந்திருந்தது.

அவன் கோலத்தைக் கண்டு அவன் காவல்துறையைச் சார்ந்தவன் என்று அன்வருக்குப் புரிந்தது. நடந்ததை தெளிவாக அவருக்கு விளக்கினான்.

சகஜ நிலைக்குத் திரும்பியிருந்த திராவிடன் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அந்தப் பையில் என்ன இருக்கும் என்று எல்லோருக்கும் ஆவல் இருந்தாலும் குணா எச்சரிக்கையாகச் செயல்பட்டார்.

தனது அலைபேசியில் முதலில் கோடம்பாக்கத்து ரயில் நிலைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு சுப்புவின் அங்க அடையாளங்களை விவரித்தார். பின்னர் சந்தோஷைத் தொடர்பு கொண்டு ஸ்ரீகுமார் பற்றியும் அவன் தவற விட்ட பை பற்றியும் தகவல் பெற்றார்.

பொதுமக்கள் இவை எதிலும் பட்டும் படாமல் என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்ப்பதிலும், அதைப் பற்றி தங்கள் அறிவுக்கெட்டியபடி விமர்சிப்பதிலும் நேரம் கடத்தினார்கள். கிச்சாவின் நிலை கண்டு பரிதாபப்பட்ட சிலர் எட்வர்டையும், அன்வரையும் பாராட்டினார்கள். பொதுவாக எல்லோரையுமே குணா சமயத்தில் உதாவாமைக்காகக் கடிந்து கொண்டார்.

இத்தனையும் நடக்கையில் ராஜாபாதர் மட்டும் பயந்து போய் உட்கார்ந்திருந்தான். தன்னிடம் இருக்கும் பொருளுக்கும் இப்படி ஏதாவது நடந்து விடுமோ என்ற எண்ணம் அவனை வியர்க்க வைத்தது. அதைவிட நிசாருக்குப் ஃபோன் பேசவும் அச்சப்பட்டான். தான் ஒன்று பேச வேற ஏதாவது நடந்து விடுமோ என்றபடி ஜன்னல் வெளியே வேடிக்கை பார்க்கலானான்.

சிந்துஜாவுக்கு எட்வர்டின் மேலிருந்த கோவம் பறந்து போயிருந்தது. அவன் இப்படி ஒரு வீரச் செயலில் ஈடுபடுவானென்று கனவிலும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கத்தியால் குத்தப் போவதைப் பார்த்து அப்படியே ஆவென்று கத்திவிட்டாள். நல்ல வேளையாக அன்வர் மின்னல் வேகத் தாக்குதலால் அதைத் தடுத்து விட்டான். எப்படியாவது எட்வர்டிடம் பேச வேண்டுமென்ற உந்துதல் அதிகரித்தது.

ரயில் நிலையம் வந்துவிட்டதை மக்களின் பரபரப்பு உணர்த்திற்று.



(தொடரும்)


2 comments:

  1. ஒரு திகில் படம் பார்ப்பது போன்ற விறு விறுப்பு கடைசி இரண்டு பதிவுகளில். தொடருங்கள் தொடர்கிறேன்

    ReplyDelete
  2. உங்கள் ஆதரவுக்கு நன்றி அய்யா.

    ReplyDelete