Wednesday, March 23, 2016

தாம்பரம் டு பீச் - 7

ஏழு     -    பழவந்தாங்கல்

08 : 24

கூட்டமான ரயிலில் ஆண்கள் பெட்டியில் ஏறி விட்டிருந்தாள் மேரி.

நல்ல வேளை அவளுக்கு ஒரு இளைஞன் எழுந்து இடம் தந்தான். பெண்கள் பெட்டியில் கடைசிவரை நின்று கொண்டே போன அனுபவங்கள் கண்முன் வந்து போயின.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள அந்தோனியார் கோவிலுக்குப் போய் மனமுருகப் பிரார்த்தனை பண்ணுவது அவள் வழக்கம். அதுக்கு வலுவான காரணம் இருந்தது.

அவளுக்கு ரெண்டு புள்ளைங்க.  ஆனா பாவம், ரெண்டுமே பொறந்த நாள் முதலா ஆஸ்துமா நோயால வாடி வதங்குச்சுங்க. பார்க்காத வைத்தியமில்ல. அப்பத்தான் பக்கத்து வீட்டு லிசி அக்கா அந்தோனியார் மகிமை பத்திப் பேசினாங்க. ஒரு நாள் மேரியவும் கூடவே கூட்டிக்கிட்டுப் போனாங்க.  அன்னைக்கு நல்ல கூட்டம். மேரி மனமுருகி வேண்டினா. அவளுக்கு ரெண்டு கண்ணுலேயும் கண்ணீர் அருவியாப் பெருகிச்சு. பிரார்த்தன முடிஞ்சு வெளியே வந்ததும் மனசு லேசான மாதிரி இருந்திச்சு.

வீட்டுக்கு வந்து பார்த்தா பசங்க ரெண்டும் வெளியில விளையாடிட்டு இருந்திச்சுங்க. அந்த மாதிரி அதுகள இவ பார்த்ததேயில்ல. ரெண்டு அடி எடுத்து வச்சாலே மூச்சு வாங்கிற பசங்க அவ்வளவு ஆர்வமா ஓடிப் புடிச்சு விளையாடுனாங்க.

      ‘அந்தோனியாரே’ னு அப்பிடியே உட்கார்ந்துட்டா.

மேரிக்கு சொந்த ஊர் நாகர்கோயில் பக்கம். சென்னையில எபனேசருக்கு வாழ்க்கப்பட்டு வந்து பல வருசம் ஆச்சு. சின்ன வயசிலேயே சொந்தத்தில முடிச்சிக் குடுத்திட்டாங்க. அவருக்கு அவங்க சொந்தக்காரர் கடையில வேல. பொறந்த இடமும் செழிப்பில்லாம, புகுந்த இடமும் செழிப்பில்லாம மேரி வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு. கஷ்ட ஜீவனம் ஆனாலும் கட்டுக்கோப்பான குடும்பம்.

அந்தோனியார் மகிமையால பசங்க குணமான நாள்ள இருந்து மேரிக்கு அப்படி ஒரு நம்பிக்கை பொறந்துடிச்சு.

இவ சொல்லி நெறையப் பேருக்குப் பல கஷ்டங்கள் தீர்ந்ததக் கண்ணால பார்த்தா. எது எது எப்படியிருந்தாலும் வாரம் ஒவ்வொரு முறை அந்த அந்தோனியாரைப் போய்ப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தா. தனக்கென்றில்லாமல் பிறர்க்கும் சேர்த்து வணங்கும் நல்ல உள்ளத்தைக் கண்டு எபனேசரும் இதற்குச் சம்மதம் கொடுத்திருந்தான்.

இன்று பக்கத்துத் தெரு வாணியம்மாவுக்காக வேண்டிக்க கெளம்பி வந்திட்டா. வாணி நல்ல பொண்ணு. மேரி பசங்களுக்கு அவதான் வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுப்பா. அப்படியே வீட்டு வேலைகளுக்கும் ஒத்தாசை பண்ணுவா. அப்பா இல்லாத பொண்ணு. அம்மாதான் வீட்டு வேல செஞ்சு அதைப் பார்த்துக்கிட்டா. கஷ்டப்பட்டு பத்தாவதுவரைக்கும் படிச்சா. அதுக்குமேல பக்கத்துல இருந்த பிரிண்டிங் பிரெஸ்ல வேலை கெடச்சுச்சு. அங்க சேர்ந்து ரெண்டு மாசம்கூட ஆகல்ல, அவங்க அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமப் போச்சு. கடுமையான ஜுரம் வந்திருச்சு. எல்லாருமா சேர்ந்து பக்கத்தில இருக்கிற மருத்துவமனைக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்க இருந்த டாக்டர் அவங்கள பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போகச் சொல்லிட்டாரு. அங்க போய் சேர்ந்து பெரிய பாடாய்ப் போச்சு. ஆட்டோக்கார மைக்கல் அண்ணனும், எதிர் வூட்டு செண்பகமும், மேரியும் வாணி கூடவேயிருந்தாங்க. ரெண்டு நாள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் இருந்து ஒரு வழியாத் தேத்தி வூட்டுக்குக் கூட்டியாந்தாங்க. வாணியம்மா மேரி கையப்புடிச்சிட்டு ஓன்னு அழுதாங்க. நீ தெய்வம் மேரி அப்படின்னு கட்டிக்கிட்டாங்க.

அவங்க சார்பாத்தான் இன்னைக்கு கோவிலுக்குப் போறா.

நல்லது நடக்கும்ன நம்பிக்கையோட.



(தொடரும்)

No comments:

Post a Comment