08 : 19
ஸ்ரீகுமார்
கேரளாவில் கொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தான். மிகவும் வறிய குடும்பம். அம்மாவும்
அப்பாவும் கூலி வேலை செய்து வந்தார்கள். அவனையும் சேர்த்து 5 பிள்ளைகள். தினமும் அரைவயிறு
கஞ்சிதான். பள்ளிப் படிப்பு வறுமையால் பாதியில் நின்றது. நல்ல வேளை, அக்காக்கள் அழகாக
இருந்ததால் வரன்கள் தாமாகவே முன் வந்து திருமணம் செய்தார்கள். அதில் ஒரு மைத்துனர்
டுபாயில் இருந்தார். இவனுக்கும் விசா ஏற்பாடு பண்ணிக் கூடவே கூட்டிக் கொண்டு போனார்.
டுபாய்
இவனுக்கு பிரமிப்பாய் இருந்தது. ஆனால், வேலை பெண்டு நிமிர்ந்தது. மச்சான் வேலை செய்த
வோர்க் ஷாப்பில் வேலை பழகினான். கடும் உழைப்பால் முன்னேறினான். பணம் சேர்ந்தது. கூடவே
ஊரில் செல்வாக்கும் கூடியது. திருமணமும் காலாகாலத்தில் நடைபெற்றது. குடும்பத்தை ஊரில்
விட்டு விட்டு மீண்டும் வளைகுடா வாழ்க்கை. பேயாய் உழைத்தான். துணிந்து அனைத்துத் தொழில்களிலும்
இறங்கினான். தர்மம், நியாயம் எல்லாம் வேலைக்காகாது என்று முழுசாக நம்பினான். படித்தவர்களைக்
கண்டாலே உள்ளே கறுவினான். தனக்குக் கிடைக்காத படிப்பு அவர்களுக்கு அமைந்தது வசம்பாய்க்
கசந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை மட்டம் தட்டுவதை வழக்கமாகக் கொண்டான்.
இவனுக்கு
பெனோ நண்பனானான்.
ஒரு நிறுவனத்தில்
விற்பனைப் பிரதிநிதியான இவன் ஸ்ரீகுமாரின் கட்டுப்பாட்டில் இருந்த வீட்டில் சில காலம்
தங்கினான். ஊர்ப்பாசம் இருவரையும் இணைத்தது. பணம் பற்றிய சிந்தனை அந்த நட்பை மேலும்
பலப்படுத்தியது.
எவ்வளவு
நாள் இப்படியே இருந்து கஷ்டப்படுவது என்று ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டார்கள்.
‘ஏட்டா, எனக்கு ஒரு பெரிய ஜோலி கெடச்சிருக்கு,
அதைப் பண்ணினா பெரிய அமவுன்ட் கெடைக்கும்.
நாட்டில போய் செட்டில் ஆகிடலாம்’
பெரிய
தொகை என்றதும் ஸ்ரீகுமாரின் மூக்கு வேர்த்தது.
‘என்னையும் பிஸ்னஸ் பார்ட்னராய் சேர்த்துக் கொள்ளேன்.'
‘அதுக்கு சம்பந்தப்பட்டவங்களைக் கேட்கணும்’
‘என்னப்பா இப்படிச் சொல்ற?’
‘ஏட்டா,
பெரிய பார்ட்டி அவங்க ஒத்துக்கிட்டா நீயும் எங்க கூட வந்திடலாம், மனசிலாயோ?’
இந்த
சம்பாஷணை முடிந்து ரெண்டு நாளில் ஸ்ரீகுமாரிடம் ஒப்புதல் வழங்கப் பட்டது. ஒரு குறிப்பிட்ட
நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைக்கப் பட்டான். அங்கே பல பேர் இருந்தார்கள். எல்லோரும்
வடமொழியில் பேசினார்கள்.
முடிவில்
இவனிடம் ஒருவன் ஆங்கிலத்தில் பேசினான்.
‘உனக்கு
இன்றிரவு சென்னை செல்ல விமானப் பயணச் சீட்டு ஏற்பாடாகியுள்ளது. அங்கே விமானநிலையப்
பணியாளர் ஒருவர் உன்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உனக்கு ஒரு பொதி தருவார்.
ரயிலில் எழும்பூர் சென்று ஒரு நண்பரிடம் அதை ஒப்படைக்க வேண்டும். அவர் தொலைபேசி எண்
உனக்கு இன்று கிடைக்கும். உனக்கான சன்மானம் உனது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது’
தனது
தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்த சமிக்ஷை.
எடுத்துப்
பார்த்தான். பெருந்தொகை இருப்புக் கணக்கில் ஏறியிருந்தது.
ஆச்சர்யப்பட்டான்.
இது சரியா
தவறா என்று யோசிக்க பணத்தாசை தடுத்தது.
இப்பொழுது
தனக்குச் சொல்லப்பட்ட அறிவுரையின்படி திரிசூலம் ரயில் நிலையத்தில் தன்னை சரியாக அடையாளம்
கண்டு கொண்ட, ஆனால் தான் யாரென்று அறிந்திடாத யாராலோ கொடுக்கப்பட்ட இரு பெரும் பைகளுடன்
ரயில் ஏறினான்.
(தொடரும்)
No comments:
Post a Comment