Tuesday, March 22, 2016

தாம்பரம் டு பீச் - 6

ஆறு      -     மீனம்பாக்கம்

08 : 21

திராவிடனின் சொந்த ஊர் திண்டிவனத்துக்குப் பக்கம். செஞ்சிச் கோட்டை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்களே? அதுதான் அவர் ஊரு. விவசாயக் குடும்பம். அதே நேரம் நாட்டுப்பற்று நெறைய. இவங்க தாத்தா காந்தியோட தண்டி யாத்திரையில கலந்துக்க வட இந்தியா வரைக்கும் போனவரு. இவங்க சித்தப்பா பாகிஸ்தான் போருல வீரமரணம் அடைஞ்சவரு. இந்த தலைமுறைக்கு ராணுவத்தில பெருமையாச் சேர்ந்தவர் திராவிடன். எல்லையில 10 வருஷம் வேல பாத்திட்டு இப்ப ரெண்டு மாசமாத்தான் சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கார்.

கல்யாணத்துக்குப் பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்காங்க. ரெண்டு, மூணு பொண்ணுங்க ஜாதகமெல்லாம் வந்திருக்கு. வீட்டுல இவனோட அம்மாவும், கல்யாணமான அக்காவும் எப்படியும் சித்திரைக்குள்ள முடிக்கணும்னு தீவிரமா இருக்காங்க.

வேலைத் தளத்திலேயே தங்கி வேலை பார்க்க வேண்டிய சூழல். வாரம் ஒருமுறை வீட்டுக்குப் போய் வருவது மனதுக்கு இதம்.

இன்று கோட்டையிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு பணி நிமித்தமாகச் செல்ல வேண்டியதாயிற்று.

காலையில் ஊரிலிருந்து நண்பன் விமலநாதன் பேசினான்.

‘மாப்பிள்ள, எப்பிடிடா இருக்க? இங்க ஊர்ல திருவிழாவுக்கு வருவ இல்ல? நம்ம பசங்க எல்லாம் உன்னைப் பார்க்க ஆசையா இருக்காய்ங்க. கண்டிப்பா இந்த வாட்டி வந்துரு மாப்பிள்ள’

விமலநாதன் இவர் பால்ய சினேகிதன். சிறு வயது முதல் ஒன்றாகவே பள்ளிக்கூடத்தில் படித்தவன். கிராமத்துப் பள்ளியில் படித்ததுடன் அங்குள்ள அனைத்து இன்பங்களையும் பகிர்ந்தவன்.

பத்தாம் வகுப்புப் படிக்கும்போது, பள்ளியில் கூடப் படித்த பரிமளாமீது முழு வகுப்புமே ஆசைப்பட்டுக் கிடந்த காலம் ஒன்று இருந்தது. ஆனா, அந்தப் புள்ளையோ குனிஞ்ச தல நிமிராம வரும் ; போகும். விமலநாதன் அந்தப் புள்ளைக்குக் காதல் கடிதம் கொடுத்தது பெரிய கதை. இன்று நினைச்சாலும் சிரிப்பு வரும்.

விமலநாதனுக்குப் படிப்பு சுமாராகவே வந்தது. பார்ப்பதற்கும் அவன் ரொம்ப சுமாராகவே இருப்பான். ஆனால், அவனுக்குக் காதல் வந்தது. மற்றவர்களிடம் சொன்னால் கேலி பண்ணுவார்கள் என்ற பயம். அதைவிட நடுவில் பூந்து கெடுத்து விடுவார்கள் என்ற பயம்தான் அதிகம். தானே உட்கார்ந்து யோசிச்சி ஒரு கடிதம் எழுதினான். அதை யாருக்கும் தெரியாமல் கொடுக்க, மற்றப் பசங்களுடன் சேர்ந்து வீட்டுக்குப் போகாமல், பரிமளா வரும் வழியில் காத்திருந்தான். என்றும் அந்தப் பெண் தனியாகவே வரும். அதை தனக்குச் சாதகமாக எண்ணினான்.

பரிமளா வரும் சத்தம் கேட்டது. மறைவிலிருந்து வெளிப்பட்டு அவள் முன்னே போய் நின்றான். அவள் அரண்டு போனாள். நல்ல வேளை, வீரிட்டுக் கத்தவில்லை. தன் பள்ளியில் படிக்கும் பையன் என்று அவன் சீருடை சொன்னது.

திடீரென்று நாலாய் மடிக்கப்பட்டிருந்த ஒரு காகிதத்தை அவள் கையில் திணித்து விட்டு ஓடியே போனான்.

அவளுக்கு சிரிப்பு, சிரிப்பாய் வந்தது.

வீட்டுக்குப் போனதும் அதில் என்னதான் எழுதியிருக்கிறான் என்று படிக்க ஆவலாயிருந்தது.

படித்தாள். சிரித்தாள். தொடர்ந்து படித்தாள்.

மறுநாள் விமலநாதனிடம் அதே கடிதம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

தன்னை ஒரு ஹீரோபோல மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள நண்பர்கள் மத்தியில் அந்த கடிதத்தைப் பிரித்தான் விமலநாதன்.

அவனைத் தவிர எல்லோரும் விழுந்து, விழுந்து சிரித்தார்கள்.

சிவப்புப்பேனாவால் வரிக்கு வரி அடித்துத் திருத்தப்பட்டிருந்தது.

கடைசியில் 0/100 என்று மதிப்பெண் வேறு.

அதனடியில் அழகான கையெழுத்தில் எழுதியிருந்தது

      ‘முதல்ல தப்பில்லாம ஒழுங்கா எழுதப் பழகு, அப்புறம் காதலிச்சுக்கலாம்’

ரயில் வர பழைய நினைவுகளைக் களைந்து விட்டு ரயிரேறத் தயாரானார்.



(தொடரும்)

2 comments: