Thursday, March 24, 2016

தாம்பரம் டு பீச் - 8

எட்டு      -      பரங்கிமலை

08 : 27

ராஜாபாதருக்குக் கட்டடத்தொழில்தான் கை கொடுத்தது. படிப்பு பெருசா ஏறல்ல. எம்.ஜி.ஆர் படமுன்னா உசிரு. வீட்டுல பள்ளிக்கு மட்டம் போட்டுட்டு பல சினிமா பார்த்துருக்கான். பத்தாவது பரீட்சை எழுத வுடல்ல. பக்கத்து வீட்டுல ஒரு கொத்தனார் குடியிருந்தாரு. அவருகூட இவன் நைட் ஷோவுக்குப் போய்ப் பழக்கம். வீட்டுல அம்மாவும் அப்பாவும் வையிறதக் கேட்டுட்டு அவர்தான் தன்கூட வேலைத்தளத்துக்கு அழைச்சிக்கிட்டுப் போனாரு.கொண்டு போய் நேரா அந்த கட்டட ஓனர் முன்னாடி நிறுத்தினாரு.

      ‘யாருய்யா இவன், உனக்கு உறவா?’

      ‘ஆமாங்கய்யா, உறவுதான். படிப்பு வரல்லன்னு இங்க கூட்டிட்டு வந்தேன்’

‘ஏன்யா, நானே படிச்சிருந்தா நல்ல வேலைக்குப் போயிருக்கலாமேன்னு வேற வழியில்லாம இந்தத் தொழில்ல இருக்கேன். நீ வேற படிக்கிற பையனக் கொண்டாந்து நிறுத்திற’

‘உன் பேரென்ன?’

‘ராஜாபாதருங்கய்யா’

‘என்ன தெரியும் உனக்கு?’

‘உலகம் தெரியுங்கையா’

நிமிர்ந்து பார்த்தார். ஏனோ அவனை முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது.

      ‘எதுவரைக்கும் படிச்சிருக்க?’

      ‘பத்தாவது முடிக்கல்லைங்கய்யா’

      ‘டேய், எங்களுக்கு அது பெரிய படிப்புடா மவனே’

அதற்குக் கொத்தனாரும் கெக்கேபிக்கேயென்று சிரித்தார்.

அவனிடம் கணக்கு வழக்கு பார்க்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது. படிப்பறிவு இருந்தபடியால் அதனை ஒழுங்காகப் பார்த்தான். அத்துடன் கட்டட வேலைகளிலும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தெரியாததைக் கேட்டும், செய்து பார்த்தும் கற்றுக் கொண்டான். நாலு வருடங்களில் அந்த முதலாளிக்கு இவன் வலது கையானான். இன்னும் நாலு வருடங்களில் அவரே சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டிக் கொடுத்தார். அவன் பாவனைக்கு ஒரு பைக்கும், அவன் பொண்டாட்டி பேரில் புறநகர்ப்பக்கம் ஒரு கிரவுண்ட் நிலமும் அன்பளிப்பாக வழங்கினார். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

நியாஸ் இவன் வழியில் வரும்வரையில்.

கட்டடத் தொழிலில் உள்ள அனேகமானவர்கள் அலுப்புத்தீர சோமபானம் அருந்துவதை யாவரும் அறிவீர்கள். இவனுக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. அளவாகச் சாப்பிட்டுவிட்டு ரெண்டு பரோட்டாவும் டபுள் முட்டை ஆம்லேட்டும் சாப்பிடுவது இவனுக்கு வாடிக்கையானது. அப்படி ஒரு பாரில்தான் நியாஸ் பரிச்சயமானான். பீர் கூலிங் இல்லையென்று கடைக்காரனை முறைக்க அங்கு பதட்ட சூழல் நிலவியது. நம்ம ராஜாபாதர்தான் சமரசம் பண்ணி வச்சாப்ல. அன்று முதல் தினமும் நியாஸைப் பார்ப்பான். புன்னகையில் ஆரம்பித்த நட்பு, பின்னர் ஒன்றாய்ச் சேர்ந்து குடிக்கும் அளவுக்கு முன்னேறியது. நியாஸிடம் நிறையப் பணம் புழங்கியது அவன் நடை,உடை, பாவனைகளிலேயே நன்கு தெரிந்தது. பெரிய இடத்துப் பையன் என்பதைவிட அவன் நல்ல சரளமாக ஆங்கிலமும், ஹிந்தியும் பேசுவது ராஜாபாதருக்கு வியப்பாக இருந்தது.

ஒரு நாள் நியாஸ் இவனிடம் பேசினான்.

      ‘பாஸு, நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனுமே?’

‘என்னன்னு சொல்லு தல, உனக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்யப் போறேன்?’

‘ஒரு பொருளு, அத கொஞ்சம் உங்க வீட்ல வச்சுக்கணும். தேவைப் படும்போது நான் வாங்கிக்கிறேன்'

‘என்னப்பா அப்படியொரு அபூர்வப் பொருளு?'

‘எலெக்ட்ரானிக் ஸ்பீக்கர் செட்டு. வெளியூர்ல இருக்கிற மச்சான் அனுப்பியிருக்காரு. இப்ப இத வூட்டுக்கு எடுத்திட்டுப் போனா பிரச்சின பண்ணுவாங்க, அதான்’

ராஜாபாதரின் மிகப்பெரிய பலவீனம் யாரையும் எளிதில் நம்பி விடுவது. நியாஸ் சொன்னதையும் நம்பினான்.

பொருள் கொடுக்கப்பட்டது ஒரு ஞாயிற்றுக்கிழமை. இவன் மனைவி கேள்வி கேட்டாள்.

      ‘எதுக்கு இந்தப் பொட்டிய உங்க தலையில கட்டினாரு உங்க ஃப்ரெண்டு?’

‘ஏய், அவன் பெரிய எடத்துப் புள்ளைடி. நான் அவனுக்கு உதவுனா, அவன் எனக்கு உதவ மாட்டானா? உனக்கு இதெல்லாம் புரியாதுடி, சோத்தப் போடு பசி உயிர் போவுது’

நேற்றிரவு நியாஸ் ஃபோன் போட்டு பொருளை எழும்பூருக்கு ரயிலில் எடுத்துவரச் சொல்லியிருந்தான். இவனும் மேலே ஒன்றும் கேட்காமல் ஆட்டோவில் வந்திறங்கி இப்போ ரயிலேற நிற்கிறான்.

ரயில் வந்தது.



(தொடரும்)

2 comments:

  1. இன்னும் பயணிகள் அறிமுகம் தொடர்கிறதே. நானும் தொடர்கிறேன்

    ReplyDelete
  2. அறிமுகம் முடிந்து இனிக் கதை சூடு பிடிக்கும்.

    ReplyDelete